சிவகங்கை பள்ளி வாகன விபத்தில் ஓட்டுநரின் உரிமம் தற்காலிக ரத்து – ஆர்.டி.ஒ. மூக்கன் நடவடிக்கை

சிவகங்கையில் தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து 7-ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த விவகாரத்தில், நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியால் தனியார் பள்ளிகளில் இயக்கப்படும் வாகனங்களை RTO மூக்கன் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.…

சிவகங்கையில் தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து 7-ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த விவகாரத்தில், நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியால் தனியார் பள்ளிகளில் இயக்கப்படும் வாகனங்களை RTO மூக்கன் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் விபத்து ஏற்படுத்திய ஓட்டுநரின் உரிமத்தை 3 மாதங்களுக்கு தற்காலிக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். 

சிவகங்கை மாவட்டம் பெரியகோட்டை என்னும் இடத்தில் சார்லஸ் மெட்ரிகுலேசன் என்னும் தனியார் பள்ளி உள்ளது. சார்லஸ் மெட்ரிகுலேசன் பள்ளியில் பயிலும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த மாணவர்கள் பள்ளி வாகனத்தில் வருவது வழக்கம். அந்த வகையில், நேற்று காலையில் மாணவர்களை ஏற்றிவந்த வேன், சர்வநேந்தல் அருகே வந்த போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த கண்மாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், வேம்பத்தூரை சேர்ந்த வெள்ளைச்சாமி – கற்பகம் தம்பதியின் மகனான 7-ம் வகுப்பு மாணவர் ஹரிவேலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 20 மாணவர்கள் காயமடைந்தனர். இதையடுத்து உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் காயமடைந்த மாணவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்தில் உயிரிழந்த, மாணவர் ஹரிவேலனின் உடலை பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். விபத்தில் உயிரிழந்த, மாணவர் ஹரிவேலனின் உடலை பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

பள்ளி வாகனம் கவிழ்ந்து மாணவர் உயிரிழப்பு - பள்ளி நிர்வாகம் மீது பெற்றோர் குற்றச்சாட்டு! -

இதனிடையே ஹரிவேலனின் தாய் மருத்துவமனை முன்பு கதறிய காட்சி காண்போரை கண்கலங்க செய்தது. சிவகங்கை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த மாணவர் ஹரிவேலனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி நிர்வாகிகள் மற்றும் உறவினர்கள் இடையே போலீசார் பேச்சுவார்த்தை நடத்த முயன்ற போது, வாக்குவாதத்தில் ஈடுபட்ட உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது நியூஸ் 7 தமிழுக்கு பேட்டியளித்த உயிரிழந்த மாணவரின் தாய் கற்பகம், விதிமுறை மீறி செயல்பட்ட பள்ளியை மூட வேண்டும் என்று கண்ணீருடன் பேட்டியளித்தார். 15 வருடம் தவமிருந்து பெற்ற செல்ல மகனை இழந்துவிட்டதாகவும் அவர் கதறி அழுதார். மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த விபத்து குறித்து அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவனின் உறவினர்களிடம் கோட்டாட்சியர் சுகிதா, மானாமதுரை டிஎஸ்பி கண்ணன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் கோட்டாட்சியர் சுகிதா உறுதியளித்தார். ஆனால், தொடர்ந்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில் மாவட்ட எஸ்.பி. பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையின் முடிவில் பள்ளியை சீல் வைக்க ஒப்புக்கொண்டதால், மகனின் உடலை பெற்றுக்கொள்வதாக தாய் கற்பகம் தெரிவித்தார்.

பள்ளியின் வாகனத்தை வழக்கமாக நடராஜ் என்பவர் இயக்கி வந்த நிலையில், நடராஜ் விடுமுறை என்பதால், அவரது சகோதரர் சுரேஷ் என்பவர் வாகனத்தை இயக்கியுள்ளார். மேலும், வாகனத்தில் கதவு இல்லாமல் இருந்துள்ளதும், மாணவர் உயிரிழப்புக்கு காரணமாக அமைந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து ஆய்வு மேற்கொண்ட வட்டார போக்குவரத்து அலுவலர் மூக்கன், விபத்துக்குள்ளான வாகனம் மாணவர்களை ஏற்றி செல்ல முறையான அனுமதி பெறவில்லை என்று நியூஸ் 7 தமிழுக்கு தகவல் தெரிவித்தார். இது குறித்து நியூஸ் 7 தமிழுக்கு தொலைபேசி வாயிலாக பேட்டியளித்த மாவட்ட கல்வி அலுவலர் அம்பிகாவதி, பள்ளி நிர்வாகம் மீதும், நிர்வாகிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

மாணவரின் உயிரை பறித்த வாகனம்: பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதி! -

முழுமையான விசாரணை அறிக்கை வந்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். சிவகங்கையில் பள்ளி வாகனம் விபத்தில் சிக்கி மாணவன் உயிரிழந்ததைத் தொடர்ந்து உறவினர்களின் கோரிக்கை, போராட்டம் என அனைத்தையும் நியூஸ் 7 தமிழ் தொடர் நேரலை செய்தது.

இந்த நிலையில் நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக, இன்று சிவகங்கை மாவட்டத்தில், தனியார் பள்ளிகளில் இயக்கப்படும் வாகனங்கள் குறித்து RTO மூக்கன் தலைமையிலான குழுவினர் இன்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது முறையாக இயக்கப்படாத வாகனங்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.

மேலும் சிவகங்கை மாவட்டம், முலைக்குளம் அருகே பள்ளி வாகனம் கவிழ்ந்து 7 ஆம் வகுப்பு மாணவன் ஹரிவேலன் உயிரிழந்த சம்பவத்தில், விபத்துக்குள்ளான வாகனத்தை ஓட்டிய சுரேஷின் ஓட்டுநர் உரிமத்தை 3 மாத காலம் தற்காலிக ரத்து செய்து ஆர்.டி.ஒ மூக்கன் நடவடிக்கை மேற்கொண்டார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.