நடிகர் விஜய் கார் போக்குவரத்து விதிகளை மீறி சென்ற விவகாரத்தில் 500 ரூபாய் அபராத தொகையை செலுத்தியுள்ளார்.
கடந்த ஜூன் 17-ம் தேதி 10-ம் வகுப்பு மற்றும் 11வகுப்பு பொதுத் தேர்வில் தொகுதி அளவில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திய தொகுதி பொறுப்பாளர்களுக்கு பாராட்டு விழா பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் பங்கேற்பதற்காக நீலாங்கரை இல்லத்திலிருந்து பனையூருக்கு விஜய் காரில் சென்றார். அப்போது விஜய் கார் சிக்னலை மீறி சென்றதாக புகார் எழுந்தது. மேலும் போக்குவரத்து காவல்துறை சார்பில் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு அதற்கான ரசீதும் அவருக்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில் அபராத தொகையான 500 ரூபாயை நடிகர் விஜய் செலுத்தியுள்ளார். அவர் அபராத தொகை செலுத்தியதற்கான ரசீதும் வெளியாகியுள்ளது. அவரின் இந்த செயலை ரசிகர்கள் இணையத்தில் பாராட்டி வருகின்றனர்.







