திருச்சி அருகே கம்பரசம்பேட்டை ஊராட்சியில் குடிநீர் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் திருச்சி- கரூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் ஒன்றியம் கம்பரசம்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட குடியிருப்பு பகுதிகளில் கடந்த மூன்று மாதத்திற்கு மேலாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து அந்தநல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் பல அதிகாரிகளை சந்தித்த போதும் எவ்வித பலனும் அளிக்காத நிலையில் கம்பரசம்பேட்டை பொதுமக்கள் இன்று திடீரென்று திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கம்பரசம்பேட்டை அந்தநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் காவிரி ஆற்றில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களுக்கு
கூட்டு குடிநீர் திட்டத்தின் வாயிலாக குடிநீர் செல்லும் நிலையில் கரையோரத்தில் இருக்கும் தங்களுக்கு முறையாக குடிநீர் வழங்கப்படாமல் இருப்பது வேதனை அளிப்பதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இது குறித்து உயர் அதிகாரியுடன் கலந்து பேசி உடனடியாக குடிநீர் வசதி கிடைக்க வழி வகை செய்வதாக உறுதி அளித்த நிலையில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
— சே. அறிவுச்செல்வன்