மறந்தும் கூட குடும்பத்தாருடன் படப்பிடிப்புக்காக மணிப்பூர் சென்றுவிடாதீர்கள். இதுவே என் எச்சரிக்கை என இயக்குநர் அமீர் மணிப்பூர் விவகாரம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பழங்குடியின அந்தஸ்து தொடர்பாக கடந்த மே மாதம் இரு இனத்தவர்களிடையே தொடங்கிய மோதல் கலவரமாக உருவெடுத்தது. இதில் 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்பு கருதி வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த கலவரத்தில் குக்கி பழங்குடியினத்தை சேர்ந்த 2 பெண்களை நிர்வாணப்படுத்தி வீதியில் ஊர்வலமாக அழைத்து சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு தேசிய அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயலை தடுக்க முயன்ற அவரது சகோதரர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அனைவர் மனதிலும் ஆறாத வடுவாய் மாறியுள்ளது. இந்த கொடூர செயலுக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக அரங்கேறிய இந்த கொடும் சம்பவத்தின் எதிரொலியாக தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள், மாதர் சங்கத்தினர், மற்றும் மாணவர்கள் சங்கத்தின் சார்பாக பலவிதமான போராட்டங்களை கையில் எடுத்துள்ளனர்.
இந்நிலையில் பிரபல இயக்குநரும், நடிகருமான அமீர், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக திரைப்பிரபலங்கள் யாரும் கருத்து கூறாதது குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, “எங்கே போனார்கள் அல்டிமேட் ஸ்டார், இளைய தளபதி, சூப்பர்ஸ்டார், உலகநாயகன், லிட்டில் சூப்பர்ஸ்டார், மக்கள் செல்வன், சீயான், நற்பணிநாயகன், சின்னரஜினி?
மறந்தும்கூட உங்கள் குடும்பத்தாருடன் படப்பிடிப்புக்காக மணிப்பூர் சென்றுவிடாதீர்கள். இதுவே என் எச்சரிக்கை.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.