நீட் தேர்வு விலக்கு பெறுவதில் தாமதம் கூடாது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
நீட் தேர்வில் தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற அச்சம் காரணமாக,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரைச் சேர்ந்த மாணவர் ஒருவர் நேற்று முன்தினம் உயிரை மாய்த்துக் கொண்டார். இதேபோல, கடந்த புதன்கிழமை சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவரும் உயிரை மாய்த்துக் கொண்டார். இச்சம்பவம் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நீட் தேர்வு விலக்கு பெறுவதில் தாமதம் கூடாது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் எந்தத் துயரம நடந்துவிடக் கூடாது என்று அனைவரும் வேண்டிக் கொண்டிருந்தார்களோ அந்தத் துயரம் ஒரே வாரத்தில் 2வது முறையாக நிகழ்ந்திருக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரைச் சேர்ந்த முரளி கிருஷ்ணா என்ற மாணவர் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார். உயிரை மாய்த்துக் கொண்டதற்கான காரணத்தை விளக்கி கடிதம் ஒன்றையும் அவர் எழுதி வைத்துள்ளார். ஒருபுறம் கிராமப்புற மாணவர்களால் நீட் தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெற முடியாது என்ற அச்சத்தால் ஏற்படும் மன அழுத்தம், மறுபுறம் தமது பிள்ளைகளை எப்படியாவது மருத்துவராக்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் பெற்றோர்கள் கொடுக்கும் அழுத்தம் ஆகிய இரண்டையும் தாங்கிக் கொள்ள முடியாத மாணவர்கள்தான் தேர்வுக்கு முன்பே உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். நடப்பு ஆண்டில் இந்த அழுத்தத்திற்கு இறையாகிய முதல் மாணவர் முரளி கிருஷ்ணா அல்ல… ஏற்கனவே கடந்த புதன்கிழமை சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவர் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார். இவை இனியும் தொடரக் கூடாது.
மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு மிகப்பெரிய சமூக அநீதி. அது உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்பதில் சமூக நீதியில் அக்கறை கொண்டவர்களுக்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், மாணவர்களின் உயிரிழப்புக்கு அவர்களிடம் தன்னம்பிக்கையும், விழிப்புணர்வும் இல்லாததும், அவர்களின் குடும்பத்தினரிமிருந்து திணிக்கப்படும் அழுத்தமும்தான் மிக முக்கியக் காரணம். மாணவர்களைஉயிரிழப்புக்குத் தூண்டும் நீட் தேர்வை ரத்து செய்ய தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரும் சட்டம் தமிழக சட்டப் பேரவையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 13ஆம் தேதி நிறைவேற்றப்பட்டு 234 போராட்டத்துக்குப் பிறகு மே 3ஆம் தேதி தான் மத்திய அரசுக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து அனுப்பப்பட்டிருக்கிறது. அதன்பின் 67 நாட்களாகிவிட்டன. இதற்கு மேலும் இந்த விஷயத்தில் தமிழக அரசு தாமதம் காட்டக் கூடாது. தமிழக முதல்வர் உடனடியாக தில்லி சென்று பிரதமரை சந்தித்து நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீட் தேர்வுக்கு இன்னும் 8 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அத்தேர்வை எழுதவிருக்கும் மாணவர்கள் மத்தியில் நிலவும் அச்சம், அழுத்தம், மன உளைச்சல் ஆகியற்றைப் போக்குவதற்காக அவர்களுக்கு தொலைபேசி வழியிலான கவுன்சலிங் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
-ம.பவித்ரா