தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு மாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
சென்னை துரைப்பாக்கத்தை சேர்ந்த சேஷன் என்பர் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் நாட்டு இன மாடுகளை மட்டும் அனுமதிக்க உத்தரவிட வேண்டும் எனவும் வெளிநாட்டு மற்றும் கலப்பின மாடுகள் பங்கேற்கத் தடை விதிக்க வேண்டும் எனவும் மனு தாக்கல் செய்திருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்த மனுவில், “நாட்டு மாடுகளுக்குப் பெரிய திமில் இருக்கும் என்பதால், அதனை ஜல்லிக்கட்டு வீரர்கள் பிடிக்க வசதியாக இருக்கும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு:
ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் நாட்டு மாடுகள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்க வேண்டும். வெளிநாட்டு மாடுகள், கலப்பின மாடுகளைப் பங்கேற்க அனுமதிக்கக் கூடாது. ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுகள் நாட்டு மாடுகள் எனக் கால்நடை மருத்துவர்கள் சான்றளிக்க வேண்டும். பொய் சான்றிதழ் அளித்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், உயர்நீதிமன்றம் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.