துருக்கியில் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட தனது எஜமானருக்காக 6 நாட்கள் மருத்துவமனையின் வாசலிலேயே காத்திருந்த நாயின் பாசத்தை கண்டு நெகிழ்ந்த மருத்துவர்கள், ஊழியர்கள்.
துருக்கியில் மூளை தொடர்பான நோய்காக மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட தனது எஜமானருக்காக 6 நாட்கள் மருத்துவமனையின் வாசலிலேயே காத்திருந்த போன்குக் எனப் பெயர் கொண்ட நாய் சமுக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. கடந்த ஜனவரி 14 ஆம் தேதி மூளையில் ரத்த உரைவு ஏற்பட்டதால் சென்டர்க் என்ற 68 வயதுடைய முதியவர் துருக்கியின் ட்ரப்சோன் நகரத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். இந்நிலையில் அவர் ஆசையாக வளர்த்து வந்த நாய் வீட்டில் வேறு யாருக்கும் தெரியாதவாறு தப்பித்து, ஆம்புலன்ஸின் பின்னாலயே மருத்துவமனைக்கு சென்றடைந்தது.

மருத்துவமனைக்கு வெளியே நாய் ஒன்று தனியாக நிற்பதை பார்த்த மருத்துவமனை ஊழியர்கள், அதுகுறித்து விசாரித்தபோது, நாயானது சென்டர்கிற்கு சொந்தமானது என கண்டறிந்தனர். பின்னர் இது குறித்து சென்டர்க்கின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து நாயை அழைத்துச் சென்றாலும், மறுநாள் நாய் வீட்டிலிருந்து தப்பித்து மீண்டும் மருத்துவமனை வாயிலுக்கு வந்து எஜமானருக்காக காத்திருந்தது. இதைப்போலவே சென்ட்ரிக் மருத்துவமனையில் இருந்த 6 நாட்களும் இவ்வாறே நடந்தது.
இதுகுறித்து மருத்துவர்கள் சென்டரிக்கிடம் கூறியபோது, அவர் வாயிலுக்கு கண்ணாடி கதவு வாயிலாக நாயிடம் உரையாடியுள்ளார். ஆனாலும் போன்குக் எனப்படும் நாயோ வீட்டிற்கு செல்லாமல் அங்கேயே காத்திருந்தது. இந்த ஆறு நாட்களில், மருத்துவமனை ஊழியர்களே, போன்குக்கிற்கு தேவையான உணவுகளை வழங்கி நன்கு பார்த்துக்கொண்டனர். மேலும் அந்த நாயும் அவர்களுடன் பாசமாக பழகியதால் ஊழியர்கள் அனைவரும் அதனுடன் சேர்ந்து விளையாட ஆரம்பித்துவிட்டனர்.

இதுகுறித்து ஊழியர் ஒருவர் கூறும்போது, ‘போன்குகால் இங்கு யாருக்கும் ஆபத்து இல்லை, போன்குக் மற்றும் சென்டர்கின் இடையே உள்ள அன்பு எங்களை ஆசுவாச படுத்துகிறது’ என்று தெரிவித்துள்ளார். 6 நாட்களுக்கு பின் டிஸ்சார்ஜ செய்யப்பட்ட சென்டர்கின் சக்கர நாற்காலியை சுற்றி வந்து தனது அன்பை வெளிப்படுத்திய போன்குக்கை கண்டு மருத்துவர்கள், ஊழியர்கள் அனைவரும் நெகிழ்ச்சியடைந்தனர்.







