அதிமுக ஆட்சிக்கு மாறாக மக்கள் திமுகவை ஆதரித்தனர் ஆனால் தாலிக்கு தங்கம், அம்மா கிளினிக் உள்ளிட்ட அதிமுக திட்டங்களை மூடியதே திமுகவின் ஓராண்டு சாதனையாக உள்ளது என அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
திருவாரூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஓராண்டு திமுக ஆட்சி இருண்ட ஆட்சியாக உள்ளது என குற்றம்சாட்டினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
வாக்களித்த மக்களுக்கு, திமுக ஆட்சி சோதனையானது என நிரூபிக்கப்பட்டு வருவதாகவும், திமுக கொடுத்த வாக்குறுதிகளுக்கு எதிராக செயல்பட்டு வருவதாகவும் கூறினார். மக்கள் பாதிக்கும் வகையிலேயே திமுக ஆட்சி உள்ளது என்றார். அதிமுக ஆட்சிக்கு மாற்றாக திமுக ஆட்சியை மக்கள் கொண்டு வந்தனர். ஆனால் திமுகவின் சுயரூபம் வெளிப்பட்டு உள்ளது. இது 2020ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்றார். அதே நேரத்தில் அதிமுக எதிர்க்கட்சியாக சரியாக செயல்பட்டு வருவதாகவும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
இந்தி திணிப்பை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் என கூறிய அவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக அரசை விடியல் ஆட்சி எனக் கூறுவது தவறு என்றார். இதனை இருண்ட ஆட்சி என அழைக்க வேண்டும் என்ற டிடிவி தினகரன், ஓராண்டு ஆட்சியில் தாலிக்கு தங்கம், அம்மா கிளினிக் போன்ற சிறந்த திட்டங்களை மூடுவிழா நடத்தியதே திமுகவின் சாதனையாக உள்ளது என குற்றம்சாட்டினார்.