ஆதிச்சநல்லூரில் கடந்த 2004ம் நடந்த அகழாய்வு அறிக்கையை வெளியிட திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பேட் மாநகரம் என்ற ஊரில் கொரோனா கால கட்டத்தில் தமிழக அரசு சார்பில் இரண்டாம் கட்ட நிவாரண நிதி இரண்டாயிரம் ரூபாய் மற்றும் 14 வகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்க தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆகியோர் இன்று (15-06-2021) வருகை தந்தனர்.
அதன் பின்னர் பொதுமக்களுக்கு ரூ.2000 நிவாரண நிதி மற்றும் 14 வகை பொருட்களை கனிமொழி எம்.பி. வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி மத்திய அரசு ஆதிச்சநல்லூரில் கடந்த 2004ம் ஆண்டு நடந்த ஆய்வு அறிக்கையை இன்னும் வெளியிடவில்லை என தெரிவித்தார். மேலும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிச்சநல்லூரில் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கும் பணியும் தற்போது வரை தொடங்கவில்லை எனவும் இதுகுறித்து தொடர்ந்து நாங்கள் மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம் எனவும் தெரிவித்தார். மேலும் சிவகளை அகழாய்வு பணியின் அறிக்கையும் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.







