நாடாளுமன்ற தேர்தலில் ஒட்டு மொத்த அளவில் வெற்றி பெற்றால் தான் இந்த நாட்டை காப்பாற்ற முடியும். இந்தியாவை காப்பாற்ற திமுகவினர் தயாராக இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் கூறியுள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கலைஞர் அரங்கில் திமுக மாநில விவசாய அணி துணை செயலாளர் நல்லசேதுபதி இல்லத் திருமண விழாவில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு திருமணத்தை தலைமை ஏற்று நடத்தி வைத்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடர்ந்து திருமண நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், திமுகவின் விவசாய அணியின் துணை செயலாளராக இருந்து பொறுப்போடு பணியாற்றி வரும் நல்ல சேதுபதி இல்ல திருமண விழாவை தலைமை ஏற்று நடத்தி கொடுக்க வாய்ப்பு அளித்ததற்கு நன்றி.
நான் எப்போது அதிகம் பேசுவது இல்லை செயலில் தான் திறமையை காட்ட வேண்டும் என்பது என் எண்ணம். இங்கு நடைபெற்றுள்ள திருமணத்தை பொறுத்தவரை சுய மரியாதை பாணியில், சீர்திருத்த திருமணமாக நடந்துள்ளது. சட்டப்படி முறைப்படி செல்லுபடியாகும் திருமணம், சுய மரியாதை உணர்வோடு நடந்துள்ளது.
2024ல் வர உள்ள நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி பூத் கமிட்டி அமைக்க இலக்கு வைத்துள்ளோம். அப்போது தான் இந்த நாட்டை காப்பாற்ற முடியும். இந்த இரண்டு ஆண்டு கால ஆட்சி திராவிட ஆட்சி என்பதை விட இது நம்முடைய ஆட்சி. இந்த இரண்டு ஆண்டு ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. பற்றாக்குறை இருந்தாலும், மத்திய அரசு தேவையான அளவுக்கு துணை நிற்காவிட்டலும் இந்தியாவில் சிறந்த மாநிலமாக, சிறந்த முதலமைச்சர் கொண்ட மாநிலமாக பெயர் பெற்றுள்ளோம்.
அண்ணா பிறந்த நாள் அன்று உரிமைதொகை மாதம் ஆயிரம் வழங்கப்பட உள்ளது. பெண்கள் முன்னேற்றத்திற்கு பல திட்டங்களை தீட்டி வந்தாலும், மாநில உரிமைகளை விட்டுக் கொடுக்க கூடாது என்று செயல்பட்டு வருகிறோம். நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் தான் இந்த நாட்டை காப்பாற்ற முடியும். இந்தியாவை காப்பாற்ற திமுகவினர் தயாராக இருக்க வேண்டும். உங்களை ஊக்கப்படுத்தி கொள்ள வேண்டும். 2024 நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற உழைக்க வேண்டும் என்று கூறினார்.