திமுகவின் முப்பெரும் விழாவில் விருதுகள் பெறுவோரின் பெயர்களை திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ளது.
திமுக தொடங்கப்பட்ட நாள், பெரியார் பிறந்தநாள், அண்ணா பிறந்தநாள் ஆகியவற்றை ஒவ்வொரு ஆண்டும் திமுக முப்பெரும் விழாவாக கொண்டாடி வருகிறது. அன்றைய தினத்தில் தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் மு.கருணாநிதி, பாவேந்தர் பாரதிதாசன், பேராசிரியர் க.அன்பழகன் பெயரில் விருதுகளும் வழங்கப்பட்டு வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
10 வருடங்களுக்குப் பிறகு திமுக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள நிலையில், முப்பெரும் விழா சிறப்பாக கொண்டாடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டைப் போல அண்ணா அறிவாலயத்திலேயே முப்பெரும் விழா நடைபெறலாம் என்று தெரிகிறது.
இந்த நிலையில் முப்பெரும் விழாவில் விருது பெறுவோரின் பெயர்களை திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, பெரியார் விருது மிசா பி.மதிவாணனுக்கு வழங்கப்படுகிறது. அண்ணா விருது எல்.மூக்கையாவுக்கும், கலைஞர் விருது கும்மிடிப்பூண்டி வேணுவுக்கும், பாவேந்தர் விருது வாசுகி ரமணனுக்கும், பேராசிரியர் விருது முபாரக்குக்கும் வழங்கப்படவுள்ளது.