தேசிய கிராமப்புற குடிநீர் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் எத்தனை வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்ற திமுகவின் கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
மத்திய அரசின் மிக முக்கிய திட்டங்களில் ஒன்றாக தேசிய கிராமப்புற குடிநீர் திட்டம் கருதப்படுகிறது. 2009ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டம், 2019 முதல் ஜல் சக்தி மிஷன் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமப்புற வீடுகளுக்கும் அடுத்த ஆண்டுக்குள் குழாய் மூலம் குடிநீர் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த திட்டம் குறித்து மாநிலங்களவை திமுக உறுப்பினரான பி. வில்சன், மத்திய நீர் சக்தித் துறைக்கு முக்கிய கேள்வி ஒன்றை எழுப்பி இருந்தார்.
அதில், இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் இதுவரை எத்தனை வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என கேட்டிருந்தார்.
இதற்கு மத்திய நீர் சக்தித் துறை அமைச்சர் பிரஹலாத் சிங் பாட்டீல் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
அதில், 2009-10 நிதி ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு இத்திட்டத்திற்காக ஒதுக்கிய நிதி குறித்தும் அதில் மாநிலங்கள் செலவிட்ட நிதி குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தமிழ்நாட்டிற்கு ஆண்டுதோறும் ஒதுக்கப்பட்ட நிதி குறித்தும் செலவிடப்பட்ட நிதி குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, கடந்த 2019-20 நிதி ஆண்டில் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு இத்திட்டத்திற்காக ரூ. 373.87 கோடியை ஒதுக்கி உள்ளது. இதில், தமிழ்நாடு அரசு 373.10 கோடியை செலவிட்டுள்ளது.
இதற்கு அடுத்த நிதி ஆண்டில் மத்திய அரசு 921.99 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. அதில், ரூ.690.36 கோடியை தமிழ்நாடு அரசு செலவிட்டுள்ளது.
கடந்த 2021-22 நிதி ஆண்டில் மத்திய அரசு ஒதுக்கிய நிதி ரூ.3,091.21 கோடி. இதில் மாநில அரசு செலவிட்ட நிதி ரூ. 614.35 கோடி.
இவ்வாறு மத்திய நீர் சக்தித் துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.