முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் திமுக எம்.பி ரமேஷை ஒருநாள் சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க கடலூர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மேல்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி கோவிந்தராசு. வயது 60. இவர் கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷுக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலையில் கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் செப்டம்பர் 19-ம் தேதி அன்று வேலைக்கு சென்ற கோவிந்தராசு இரவு வெகுநேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதைத்தொடர்ந்து அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது மரணம் தொடர்பாக ஆலையின் பங்குதாரரான, கடலூர் திமுக எம்.பி. ரமேஷ் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு கடந்த 26-ம் தேதி சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதற்கிடையே, பிரேத பரிசோதனை அறிக்கையில், மதுவில் விஷம் கலந்து கொடுத்து கோவிந்தராஜூ கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, சந்தேக மரண வழக்கை கொலை வழக்காக மாற்றிய சிபிசிஐடி போலீசார், 5 பேரை கைது செய்த நிலையில், தேடப்பட்டு வந்த கடலூர் எம்.பி. ரமேஷ், பண்ருட்டி நீதிமன்றத்தில் அக்டோபர் 11-ம் தேதி சரணடைந்தார்.
மேலும், தன்மீது சுமத்தப்பட்ட புகார் ஆதாரமற்றது என்பதை சட்டத்தின் முன்பு நிரூபித்து வெளியே வருவேன் என்று அவர் அறிக்கை வெளியிட்டார். நீதிமன்றத்தில் ஆஜரான அவருக்கு 2 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் பண்ருட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டார். அக்டோபர் 13-ம் தேதி அவர் மீண்டும் ஆஜராக வேண்டும் என கடலூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததை முன்னிட்டு இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்நிலையில் ஒருநாள் சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.