நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவை வெற்றி பெற வைக்க உற்சாகமாக உழைக்க வேண்டும் என தொண்டர்களுக்கு அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல் என தொடங்கி தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், உள்ளாட்சி என்பது மக்களாட்சியான ஜனநாயகத்தின் ஆணிவேர். அது வலிவுடனும் பொலிவுடனும் இருந்தால்தான், அரசின் நலத்திட்டங்கள் நாளும் தழைத்து – நன்குசெழித்து, கடைசிப் பகுதியில் உள்ள குடிமக்கள் வரை, அவரவர்க்கான உரிமைகளையும் உற்ற நலன்களையும் பெறமுடியும். தமிழ்நாடு இப்போது, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதில், தோழமைக் கட்சித் தலைவர்கள் பலர் அண்ணா அறிவாலயத்திற்கு வந்து, தேர்தல் பொறுப்பாளர்களுடன் கலந்தாலோசனை நடத்தியுள்ளனர். அவர்களுடன் வெறும் தேர்தல் கூட்டணியாக இல்லாமல், கொள்கைக் கூட்டணியாக உள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தூய தோழமை தொடர்ந்திட வேண்டும் என்பதும் உங்களில் ஒருவனான என் வேண்டுகோளாகும் என ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து அந்த கடிதத்தில், கூட்டணிக் கட்சியினருக்கு ஒதுக்கீடு செய்தபிறகு, தி.மு.க போட்டியிட உள்ள இடங்களுக்கான கழக வேட்பாளர்கள் தேர்வு என்பது, இராணுவ வீரர்களைத் தேர்வு செய்வது போன்ற நெறிமுறைகளுடன் கண்டிப்பானதாகவும் கட்டுக்கோப்பானதாகவும் இருக்க வேண்டும். கடந்த 8 மாதங்களில் திமுக தலைமையிலான அரசு மேற்கொண்டுள்ள அருமையான திட்டங்கள் இந்திய அளவில் அனைவருடைய கவனத்தையும் கனிவான பாராட்டுகளையும் பெற்று வருகின்றன. அவை, உள்ளாட்சியின் அனைத்து நிலைகளிலும் முழுமையாகச் செயல்படுத்தப்படும்போதுதான் ‘அனைவர்க்கும் அனைத்தும்’ என்கிற நமது அரசு சார்ந்த திட்டங்களின் அற்புத நோக்கம் முழுமை பெறும். அத்தகைய செயலாற்றல் கொண்டவர்களே கழகத்தின் வேட்பாளர்களாகக் களமிறக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அனைத்துப் பகுதியிலும் உள்ள மக்கள் முன்வைக்கும் கோரிக்கைகளையும் கட்டாயம் கவனத்தில் கொள்ளுங்கள். “இது உங்களுக்கான அரசு” என்பதை மக்களிடம் விளக்கித் தெரிவித்து, நம்பிக்கையைப் பெற்றிடுங்கள் என குறிப்பிட்டுள்ளார். நல்லாட்சியின் நற்பெயரை எப்படியாவது சிதைத்திட, குறைத்திட வேண்டும் என்ற கெடுசிந்தனையுடன் நாளுக்கு நாள் பொய்யை மட்டுமே சொல்லி வரும் அதிமுக தலைமையினால் அரசால் கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு பட்ட பாட்டை நினைவுபடுத்துங்கள். தற்போதுதான் வெளிச்சம் பரவிடத் தொடங்கியுள்ளது என்பதை எடுத்துக் கூறுங்கள்.
அ.தி.மு.க ஆளுங்கட்சியாக இருந்தபோது நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலிலேயே அவர்களின் அனைத்து தில்லுமுல்லுகளையும் மீறி, திராவிட முன்னேற்றக் கழகம்தான் பெரும் வெற்றி பெற்றது. நம்முடைய ஆட்சி அமைந்தபிறகு நடைபெற்ற 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் மகத்தான வெற்றி பெற்றோம். அன்றும் இன்றும் மக்கள் நம் மீதே மாறா நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அது என்றென்றும் தொடரும் வகையில் களப்பணியாற்றுங்கள். நகர்ப்புற உள்ளாட்சியில், நாடே போற்றிடும் வகையில் வெல்வோம்; நல்லாட்சியை மேலும் மேலும் முன்னெடுத்துச் செல்வோம் என தனது கடிதத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.