இன்றும் மாநிலங்களிடைய பிளவை ஏற்படுத்துவதில் முதன்மையான கட்சி திமுகதான் என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜக தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விலைவாசி உயர்வு, மேகதாது விவகாரம், மின்கட்டண உயர்வு, திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றி , அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதாந்திர உதவித்தொகையை வழங்குவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை காரப்பாக்கம் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்றார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் பேசியதாவது;
விலைவாசி உயர்வு, லஞ்சம், ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, கனிமவளக் கொள்ளை ஆகியவற்றைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டது. காவிரி நீரை பெறுவதிலும், டாஸ்மாக் மது விற்பனையை கட்டுப்படுத்துவதிலும் தமிழக அரசு தவறி விட்டது. திமுக ஆட்சிக்கு வந்தபின் 26 மாதத்தில் 3 முறை மின்கட்டணம் உயர்ந்துள்ளது. வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்ற உயர்வு இல்லை. மத்திய அரசின் நலத்திட்டங்கள் தமிழகத்தில் ஊழலோடுதான் சென்று சேர்கின்றன. மாநில அரசுதான் இதற்குக் காரணம். இவற்றையெல்லாம் கண்டித்துத்தான் தமிழகம் முழுவதும் 15, 000 பஞ்சாயத்துக்கள், 9 ஆயிரம் வார்டுகள் என இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
மணிப்பூரைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், பயிற்சி பெற தமிழ்நாட்டுக்கு வருமாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். மணிப்பூர் குறித்து முதலமைச்சர் திடீரென இப்போது எழுந்து பேசுகிறார். அவருக்கு மணிப்பூரில் என்ன நடக்கிறது என்பதே தெரியாது . தமிழகத்தில் தண்ணீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டு 210 நாள்கள் ஆகிறது. அதை கண்டுபிடிக்க முடியவில்லை. மணிப்பூரின் பிரச்சனைகளை மத்திய அரசு முழுவதுமாக சரி செய்யும். மணிப்பூரில் பெண்களுக்கு நடந்த அநியாயத்திற்கு எதிராக மாநில அரசு 6 நபர்களை கைது செய்ததுடன், அவர்களுக்கு தூக்கு தண்டனையை பெற்று தருவோம் என அம்மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார். ராணுவ வீரர்கள் அதிகமான உயிர் , பொருள் சேதம் ஏற்படாமல் பாதுகாத்து வருகின்றனர். மணிப்பூர் 2016 க்கு பிறகுதான் அமைதியை நோக்கி சென்றது. அதற்கு முன்பு அமைதி இல்லாமல்தான் இருந்தது. ஸ்டாலின் தான் ஒரு முதலமைச்சர் என்பதை மறந்து முழுநேர அரசியல்வாதியாக இருக்கின்றார் என்பதைத்தான் விளையாட்டு வீரர்களுக்கு எழுதிய கடிதம் காட்டுகின்றது.
குன்னத்தில் பட்டாசு வெடித்த, பட்டியல் சமூகத்தை சேர்ந்த பாஜக பிரமுகரை , திமுக கிளைச்செயலாளர் காலில் விழந்து மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர். கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை ஆரம்பித்த பாஜகவிற்கு , அவர்களுக்கு எப்படி பயிற்சி அளிக்க வேண்டும் என்பதும் எங்களுக்கு தெரியும். தனது மகன் உதயநிதியை முன்னிலைப்படுத்தவே அவ்வப்போது விளையாட்டு… விளையாட்டு என முதலமைச்சர் பேசி வருகிறார். காவிரி நீரை முழுமையாக பெற்றுத்தர உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இன்று என்ஐஏ சோதனை நடைபெறுவது குறித்து கேட்கிறீர்கள். தமிழகம் தேச விரோதிகளின் புகலிடமாக மாறி உள்ளது. கடந்த 2 ஆண்டில் என்ஐஏ பல சோதனைகளை தமிழகத்தில் நடத்தியுள்ளது. இதற்கு தமிழக அரசும் ஒரு காரணம். ஏனெனில், தமிழகத்தில் காவல்துறையினர் கைகள் கட்டப்பட்டு காவல்துறைக்கு சுதந்திரம் இல்லாத நிலை ஏற்பட்டதால் குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளது;
பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத் தேர்தலின்போது தமிழகத்தில் போட்டியிடுவாரா என கேட்கிறீர்கள். பிரதமர் தமிழகத்தில் போட்டியிட்டால் எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறாரா என தேசியத் தலைமையிடமிருந்து அதிகாரபூர்வமாக இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால் தொண்டர்கள் , மக்கள் பிரதமர் தமிழகத்தில் போட்டியிட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.
இந்தியா என்று சொல்லும்பொழுது உள்ளத்தில் இந்தியர் என்ற உணர்வு இருக்க வேண்டும். ஆனால் இந்திய கூட்டணியில் இடம் பெற்றுள்ள திமுக ஒருகாலத்தில் பிரிவினை பேசிய கட்சி. பிரிவினைவாத தடுப்பு சட்டத்தால் அது பற்றி பேசுவதை பின்னர் நிறுத்தியது. திமுக இந்தியா பற்றி பேசுவது வேடிக்கையானது , விசித்திரமானது, அச்சரியமானது. இன்றும் மாநிலங்களிடைய பிளவை ஏற்படுத்துவதில் முதன்மையான கட்சி திமுகதான். இவர்கள் இந்தியா என பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. ஜம்மு காஷ்மீரை இந்தியாவோடு சேர்க்க விடாமல் செய்த கட்சி பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சி. அந்த கட்சி இந்தியா என பேசுகிறது.
உமர் அப்துல்லா , பரூக் அப்துல்லா போன்றவர்கள் காஷ்மீர் இந்தியாவுடன் சேருவதை எதிர்த்தவர்கள். ஜேஎன்யூ-வில் நடைபெற்ற போராட்டத்தில் இந்தியாவிற்கு எதிராக முழக்கமிட்ட கட்சி காங்கிரஸ். புலியை பார்த்து நாய் கோடு போட்ட கதைதான் தற்போது ‘இந்தியா..’ கூட்டணி. மக்கள் அவர்களை ஏற்க மாட்டார்கள். காங்கிரஸ் சில மாநிலங்களில் மட்டும்தான் ஆட்சி செய்கிறது. ஆனால் அந்த கட்சி தலைமையில் கூட்டணி அமைந்துள்ளது. குடும்ப கட்சிகளை காங்கிரஸ் இணைத்து வைத்துள்ளது. காங்கிரஸை விட அதிகமான மாநிலத்தில் பாஜக ஆட்சியில் இருக்கிறது . தேசிய ஐனநாயக கூட்டணியில் சிறிய கட்சி, பெரிய கட்சி என்ற வேறுபாடுகள் எல்லாம் இல்லை.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்ற அனைத்து கட்சிகளும் பாஜகவை ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால் காங்கிரசை அந்த கூட்டணியில் அவ்வாறு ஏற்றுள்ளார்களா..? நிதிஷ் , மம்தா , காங்கிரசா யார் தலைவர் என்றே தெரியவில்லை..? அங்கு யார் பிரதமர் வேட்பாளர் ? தற்போது கூட்டணியில் உள்ள பிற கட்சிகளின் தொண்டர்களை குத்தி கோன்ற கட்சிகள் காங் தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ளன .
தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை நடைபெறும் காலத்தில் நான் நடை பயணம் சென்றாலும் செல்போன் மூலமாக பிற கட்சி தலைவர்களுடன் பேச முடியும். முன்பெல்லாம் மாட்டு வண்டியில் பயணம் செய்தனர். எனது நடை பயணத்தில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் சென்று அந்த தொகுதிக்கு பிரதமர் என்ன செய்திருக்கின்றார் ? அந்த தொகுதிக்கு எவ்வளவு நிதி ஒதுக்கி இருக்கின்றார் என்ற விவரத்தை சொல்ல உள்ளேன். நடைபயணம் செல்வதற்கான உரிய காலம் இதுதான். பாஜக ஒரு போதும் தேர்தலுக்கான அரசியலில் மட்டும் ஈடுபடாத கட்சி. கட்சியின் வளர்ச்சிக்காகவே நடை பயணம் செல்கின்றேன் . நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளையும் வெல்ல வேண்டும் என்ற இலக்கும் எனது நடைபயணத்திற்கு காரணம்…” இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா