தூத்துக்குடி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் விவசாயப் பொருட்கள் இனி
நேரடியாக தூத்துக்குடியில் இருந்து ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு
வருகிறது என்று ஏரல் அருகே நடந்த நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள செபத்தையாபுரத்தில் பேய்க்குளம்
நிலச்சுவான்தார்கள் விவசாயிகள் அபிவிருத்தி சங்கத்தின் 150 வது ஆண்டு விழா
நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, மீன் வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு 150 வது ஆண்டு மலரை வெளியிட்டனர்.
அதன் பின்னர் பேசிய கனிமொழி கூறியதாவது:
விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருவது திமுக அரசுதான். கலைஞர்
ஆட்சி காலத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. அதேபோல்
விவசாயிகளுக்கு கடன்கள் ரத்து செய்யப்பட்டது. தற்போது முதல்வர் தமிழக முதல்வர்
மு.க.ஸ்டாலின் ஆட்சி காலத்தில் விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் மக்களின் கருத்துக்களும் விவசாய கருத்துகளும் தொழிலாளர்கள்
கருத்துகளும் அடிமட்ட மக்களின் கருத்துகளையும் கேட்டு செயல்படுத்தக்கூடிய
அரசு தான் இந்த திராவிட மாடல் அரசு.
எல்லோரின் குரலுக்கும் பதில் அளிக்கும் அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் தற்போது தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்தப் பணிகள் நிறைவு பெறும்போது விவசாயிகள், விவசாயப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். விவசாயிகளின் கோரிக்கைகளை செய்து கொடுக்க காத்திருக்கும் அரசுதான் திமுக அரசு என்றார் கனிமொழி.
இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் சண்முகையா, ஊர்வசி அமிர்தராஜ்,
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டேவிட் செல்வின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.








