புதிய பட்டாளத்து சிப்பாய்களின் அணிவகுப்பை உருவாக்கிடும் வகையில், ‘திராவிட மாடல் பயிற்சிப் பாசறை’க் கூட்டங்களை நடத்துவது என திமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் மாநிலம் முழுவதும் ‘திராவிட மாடல் பயிற்சிப் பாசறைக் கூட்டங்களைத் தொடர்ச்சியாக நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதில், “மதவாத நச்சு விதைகளைத் தூவிட எத்தனிக்கும், தேச விரோத – அபாயகர சக்திகளையும், அவர்களுக்குத் துணை போகும் அடிமைகளையும், விலை போகும் வீணர்களையும் அடையாளம் காட்டி, அவர்களிடமிருந்து தாய்த் தமிழ்நாட்டை எந்தவித சேதாரமும் இன்றி, பாதுகாத்திடும் புதிய பட்டாளத்து சிப்பாய்களின் அணிவகுப்பை உருவாக்கிடும் வகையில், திராவிட மாடல் பயிற்சிப் பாசறைக் கூட்டங்களை வெற்றிகரமாகவும் தொடர்ச்சியாகவும் நடத்துவது” எனக் கூறப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.