திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில் கடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற 6 வேட்பாளர்கள் இந்த முறை மாற்றப்பட்டுள்ளனர்.
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கவுள்ளது. இன்று (மார்ச் 20) முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது. இதனால் கூட்டணி, தொகுதி பங்கீட்டை நிறைவு செய்ய அரசியல் கட்சிகள் தீவிரமாக பணிபுரிந்து வருகின்றன.
அந்த வகையில் தமிழ்நாட்டில் திமுக படுவேகமாக செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்பதை உறுதி செய்துவிட்டதை தொடர்ந்து, கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதி குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, காஞ்சிபுரம் (தனி), கோவை, தூத்துக்குடி உள்பட 21 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.
காங்கிரஸ் கட்சி புதுச்சேரி உள்பட 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. விசிகவுக்கு சிதம்பரம் மற்றும் விழுப்புரத்தை திமுக கட்சி ஒதுக்கியுள்ளது. இந்த தொகுதிகள் முறையே திருமாவளவன் மற்றும் ரவிக்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் சிபிஐக்கு 2 தொகுதிகளும், சிபிஎம் கட்சிக்கு 2 தொகுதிகளும், மதிமுகவிற்கு ஒரு தொகுதியும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ராமநாதபுரம் தொகுதியையும், கொமதேக நாமக்கல் தொகுதியையும் ஒதுக்கியுள்ளது. மதிமுக கட்சிக்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அத்தொகுதியின் வேட்பாளராக துரை வைகோ அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் திமுக போட்டியிடும் 21 தொகுதிகளிலும் யார், யாருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று திமுக தலைமை பல்வேறு கட்டங்களாக ஆலோசனை நடத்தியது. மாவட்ட செயலாளர்களிடமும் கருத்து கேட்கப்பட்டது. வேட்புமனு தாக்கல் இன்று துவங்க உள்ள நிலையில், திமுக வேட்பாளர் பட்டியலை இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். முன்னதாக திமுகவின் தேர்தல் அறிக்கையையும் முதலமைச்சர் வெளியிட்டு உரை நிகழ்த்தினார். இதனைத் தொடர்ந்து 21பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இந்த பட்டியலில் கடந்த முறை போட்டியிட்டு வென்ற சிலர் நீக்கப்பட்டுள்ளனர்.

6 வேட்பாளர்கள் மாற்றம்
கடந்த முறை திமுக போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதிகளில் இம்முறை 6 தொகுதி வேட்பாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
புதிய வேட்பாளர்கள் :
- தருமபுரி – அ.மணி
- சேலம் – டி.எம்.செல்வகணபதி
- பொள்ளாச்சி – ஈஸ்வரசாமி
- கள்ளக்குறிச்சி – மலையரசன்
- தென்காசி – ராணி ஸ்ரீகுமார்
- தஞ்சாவூர் – ச.முரசொலி

கடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்கள் :
- தருமபுரி – செந்தில் குமார்
- சேலம் – எஸ்.ஆர்.பார்த்திபன்
- பொள்ளாச்சி – சண்முக சுந்தரம்
- தென்காசி – தனுஷ் எம்.குமார்
- கள்ளக்குறிச்சி – கௌதம சிகாமணி
- தஞ்சாவூர் – பழனிமாணிக்கம்







