தங்கையின் தோழியை இளைஞர் பைக்கில் அழைத்துச் சென்றதால் ஏற்பட்ட தகராறில், தடுக்க முயன்றவரை அடித்துக் கொன்ற 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், சின்ன தாராபுரம் அருகே உள்ள நஞ்சை காளிக்குறிச்சியைச் சேர்ந்தவர் ஆண்டியப்பன். இவருடைய மகன் மணிகண்டன் (19), கூலி வேலை செய்து வருகிறார். இவரது தங்கையும், ராஜபுரத்தைச் சேர்ந்த பெண் ஒருவரும் நெருங்கிய தோழிகள். இந்நிலையில், நஞ்சை காளிக்குறிச்சியில் கடந்த வாரம் நடைபெற்ற திருவிழாவிற்கு மணிகண்டனின் தங்கையின் தோழி அவரது வீட்டிற்கு வந்துள்ளார். திருவிழா முடிந்ததும் அந்தப் பெண்ணை மணிகண்டன் தனது பைக்கில் ராஜபுரத்தில் கொண்டு விட்டுள்ளார்.
அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த மதன் (26), அபிஷேக் (19), தமிழரசன் (19) ஆகிய மூவரும் மணிகண்டனை எங்கள் ஊர் பெண்ணை எப்படி கூட்டிக்கொண்டு வரலாம் என வம்பிழுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, மணிகண்டன் தனது நண்பன் சூர்யாவிடம் கூறியுள்ளார். இதையடுத்து, ராஜபுரத்தைச் சேர்ந்த நபர்களிடம் சூர்யா தனது செல்போனில்பேசியுள்ளார். அப்போது இரு தரப்பினருக்குமிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ராஜபுரத்தைச் சேர்ந்த மூன்று பேரும் இருசக்கர வாகனத்தில் உருட்டுக்கட்டையுடன் சின்ன தாராபுரத்துக்கு நேற்று முன்தினம் இரவு வந்து, பங்களா பேருந்து நிறுத்தத்தில் இருந்த சூர்யாவை உருட்டுக்கட்டையால் அடித்துள்ளனர். அப்போது, அப்பகுதியில் நின்றிருந்த அதே பகுதியைச் சேர்ந்த அரவிந்த் (28) என்பவர் அவர்களைத் தடுத்துள்ளார். அரவிந்த் முதுகலை இன்ஜினியரிங் படித்துள்ளார். இந்த சமயத்தில் சூர்யா ஓடி ஒளிந்துள்ளார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த மதன், அபிஷேக், தமிழரசன் ஆகிய 3 பேரும் அரவிந்தை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
பலத்த காயமடைந்த அரவிந்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். சூர்யாவையும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதுகுறித்து சின்னதாராபுரம் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து மதன், அபிஷேக், தமிழரசன் ஆகியோரைக் கைது செய்தனர்.








