நீட் தேர்வு பிரச்னையில் ஆளுநருக்கு அதிமுக ஒரு கண்டனமாவது தெரிவித்ததா? – அமைச்சர் உதயநிதி கேள்வி!

நீட் விலக்கு மசோதாவில் கையெழுத்திட மாட்டேன் என தைரியமாக கூறும் ஆளுநருக்கு அதிமுக இதுவரை ஒரு கண்டனத்தையாவது தெரிவித்துள்ளதா? என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் நடைபெறவுள்ள தெற்காசியாவின் முதல் ஃபார்முலா…

நீட் விலக்கு மசோதாவில் கையெழுத்திட மாட்டேன் என தைரியமாக கூறும் ஆளுநருக்கு அதிமுக இதுவரை ஒரு கண்டனத்தையாவது தெரிவித்துள்ளதா? என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் நடைபெறவுள்ள தெற்காசியாவின் முதல் ஃபார்முலா சர்க்யூட் ரேஸிங் போட்டிகள் குறித்து, தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் RPPL நிறுவனத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.

பெருநகர சென்னை மாநகராட்சி (GCC), சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் (CMDA), தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகியவை இணைந்து நடத்தும் ஃபார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப் போட்டிகள் வரும் டிசம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் சென்னை தீவுத்திடல் மைதானத்தை சுற்றியுள்ள 3.5 கிலோ மீட்டர் சுற்றளவில் இரவு போட்டியாக நடைபெறவுள்ளது.

வெளிநாட்டு தொழில்முறை வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இந்த போட்டியானது இந்தியாவின் முதல் மற்றும் தெற்காசிய நாடுகளிலேயே முதல் முறையாக நடைபெறும் ஃபார்முலா கார் பந்தயம் ஆகும். மேலும் இரவு நேரங்களில் இது நடத்தப்படுவதும், பொதுப் போக்குவரத்து சாலைகளில் பந்தயம் நடைபெறுவதும் இதுவே முதல்முறையாகும். போட்டிகளை நடத்துவதற்காக தனியார் நிறுவனங்கள், ரூபாய் 200 கோடி முதலீடு செய்துள்ளன. கூடுதலாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத் ஆணையம் சார்பில் இதற்காக 42 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் போட்டிகள் நடத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட வரைபடம் வெளியிடப்பட்டது. பின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இப்போட்டிக்கான கோப்புகளில் கையொப்பமிட்டார். அதனை தொடர்ந்து போட்டிக்கான அதிகாரபூர்வ படத்தை, RPPL நிறுவன அதிகாரிகளுடன் இணைந்து வெளியிட்டார்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மேடையில் பேசிய அமைச்சர் உதயநிதி, தமிழ்நாட்டில் தொடர்ந்து சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகளை நடத்தி வருவதின் அடுத்த நிகழ்வாக, இந்த ஃபார்முலா 4 ரேஸிங் டிசம்பர் மாதம் சென்னையில் நடைபெறவுள்ளது. இதற்காக ரூபாய் 42 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, போட்டிகள் நடத்தப்படவுள்ளன என பேசினார்.

பின்னர் நிகழ்ச்சிக்கு பின்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் நீட் விவகாரத்தில் ஆளுநர் கையொப்பம் இட மறுத்தது குறித்த கேட்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், நீட் விவகாரத்தில் திமுக உண்ணாவிரதம் மேற்கொள்கிறது என பேசினார்.

மேலும் நீட் விலக்கு மசோதாவில் கையெழுத்திட மாட்டேன் என தைரியமாக கூறும் ஆளுநருக்கு அதிமுக இதுவரை ஒரு கண்டனத்தையாவது தெரிவித்துள்ளதா? மத்திய பாஜக அரசை எதிர்த்து மூச்சாவது விட முடியுமா? நீட் விவகாரத்தில் திமுக தொடர்ந்து மாணவர்கள் பக்கம் நிற்கும், தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்தும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.