சங்கர் ஜிவால் உள்பட 5 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர ஆணையர் பதவியில் இதுவரை ஏடிஜிபி அந்தஸ்துள்ளவர்கள் நியமிக்கப்பட்டு வந்த நிலையில் டிஜிபி அந்தஸ்துள்ளவர்கள் வகிக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதேபோல காவலர் வீட்டுவசதி வாரிய தலைவர் ஏ.கே.விஸ்வநாதன், குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு கூடுதல் டிஜிபி அபஷ் குமார், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் சீமா அகர்வால் ஆகியோருக்கும் டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தற்போது வகித்து வரும் பதவியில் டிஜிபி அந்தஸ்தில் தொடர்வார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அயலகப் பணியில் டெல்லி உளவுப் பிரிவு இணை இயக்குனராக உள்ள டி.வி.ரவிச்சந்திரனுக்கும் டிஜிபி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல ஐபிஎஸ் அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. காவல் துறை தலைமையிடத்து கூடுதல் டிஜிபியாக இருந்த சங்கர், நிர்வாகப் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சைபர் க்ரைம் கூடுதல் டிஜிபியாக இருந்த வெங்கட்ராமன், காவல் துறை தலைமையக கூடுதல் டிஜிபியாகவும், தொழில்நுட்பப் பிரிவு கூடுதல் டிஜிபியாக இருந்த அம்ரேஷ் புஜாரி சைபர் க்ரைம் பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபி மகேஷ்குமார் அகர்வாலுக்கு, அமலாக்கப்பிரிவு கூடுதல் டிஜிபியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.