கிருஷ்ண ஜெயந்தியையொட்டி ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் ஏராள மான பக்தர்கள் குவிந்தனர்.
ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலில் நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வழிபட்டுச் செல்வது வழக்கம். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு தமிழக அரசு வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில், பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மூன்று நாட்களுக்குப் பிறகு இன்று கோயில் திறக்கப்பட்டதாலும் கிருஷ்ண ஜெயந்தி விழா என்பதாலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரத்துக்கு வந்தனர். அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடிவிட்டு, ராமநாதசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்ய, நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒற்றை இலக்க எண்களில் கொரோனா தொற்று இருந்து வந்த நிலையில், தற்போது ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கரை யில் சமூக இடைவெளி, முகக் கவசம் இன்றி ஏராளமானோர் குவிந்துள்ளதால் கொரோனா அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அங்குள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.








