சென்னையில் இருந்து புறப்பட்ட சொகுசு கப்பல் புதுச்சேரிக்கு வர இதுவரை அனுமதி
வழங்கப்படவில்லை என்றும், சொகுசு கப்பலில் கலாச்சாரத்தை சீரழிக்கும் எந்த
அம்சங்களையும் புதுச்சேரியில் அனுமதிக்கமுடியாது என்றும் துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மீன்பிடித் துறைமுகத்தில் என்.சி.சி. மாணவர்களின் சாகச பயணத்தை
துவக்கிவைத்த துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களுக்கு
அளித்த பேட்டியில், புதுச்சேரியின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பாக
தொடர் நடவடிக்கைகள் எடுத்து வரப்படுகின்றன. இதற்காக மத்திய அமைச்சர்கள்
அடிக்கடி புதுச்சேரிக்கு வந்து திட்டங்கள் செயல்படுவதை ஆய்வு செய்து
வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தின் ஒரு பிராந்தியமான காரைக்கால்
மாவட்டம் எந்தவகையிலும் புறக்கணிக்கப்படவில்லை.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சென்னையில் நேற்று முன்தினம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்த
சொகுசு கப்பல் புதுச்சேரி வரை செல்கின்றது என அறிவித்துள்ளது குறித்த
செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், சென்னையில் இருந்து புறப்பட்ட
சொகுசு கப்பல் புதுச்சேரிக்கு வருவது தொடர்பாக எந்தவித அனுமதியும் இதுவரை
வழங்கப்படவில்லை. அது தொடர்பான கோப்புகள் எதுவும் வரவில்லை.
வருங்காலத்தில் புதுச்சேரி சார்பில் இது போன்ற சொகுசு கப்பல்கள்
விடப்பட்டாலும், சொகுசு கப்பல்கள் அனுமதிக்கப்பட்டாலும் அதில் கலாச்சார
சீர்கேடு, இளைஞர்களை பாதிக்கும் எந்த விஷயத்தையும் அனுமதிக்க
மாட்டோம் என தமிழிசை உறுதியளித்துள்ளார். மேலும், புதுச்சேரியில்
குரங்கு அம்மை போன்ற எந்தவித அறிகுறியும் இல்லை என்றார்.
-ம.பவித்ரா