சென்னையில் டெங்கு தடுப்பு நடவடிக்கையில், கடந்த 5 மாதங்களில் 2.5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நடைபெற்ற தேசிய டெங்கு தடுப்பு தினம் நிகழ்ச்சியில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு, செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, கொசு தடுப்பு மருந்து வாகனத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு கொடியசைத்து துவக்கி வைத்தனர். அதன்பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா. சுப்ரமணியன், தமிழ்நாடு முழுவதும் தேசிய டெங்கு தினம் கடைபிடிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் ஏற்பட்ட டெங்கு பாதிப்பை மனதில் கொண்டு இன்று விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்த 2012, 2015, 2017-ஆண்டு கால கட்டத்தில் டெங்கு வைரஸ் அதிக உயிரிழப்புகள் ஏற்படுத்தியதாக தெரிவித்த அமைச்சர், அதிகபட்சமாக டெங்குவிற்கு 65 பேர் 2017-ஆம் ஆண்டு மரணம் அடைந்தார்கள் என குறிப்பிட்டார். மேலும், உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வீடு தோறும் சென்று டெங்கு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், டெங்கு காய்ச்சலை கண்டறிய இதற்கு முன்பு 125 மையங்கள் இருந்ததாக தெரிவித்த அவர், தற்போது 300 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். அதில், 21,000 பணியாளர்கள் டெங்கு தடுப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக குறிப்பிட்டார்.
அண்மைச் செய்தி: ‘‘அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும் அரசாக திமுக அரசு உள்ளது’ – அமைச்சர் சேகர்பாபு’
மேலும், கொசுக்களை ஒழிக்க தேவையான மருந்து கையிருப்பில் உள்ளதாக கூறிய அவர், கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் டெங்குக்கு 8 பேர் உயிரிழந்த நிலையில், இந்த ஆண்டில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படாத வகையில் தேவையான முன்னெச்சரிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார். மேலும், கிருஷ்ணகிரி, கன்னியாகுமாரி, தருமபுரி மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது என தெரிவித்த அவர், டெங்கு தடுப்பு நடவடிக்கை தொடர்பாக சென்னையில் கடந்த 5 மாதங்களில் 2.5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.