சென்னை கால்வாய்கரை பகுதியில் முன்னறிவிப்பின்றி வீடுகள் இடிக்கப்பட்டதால், கடும் அவதிக்குள்ளாகி வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சென்னை தாடண்டர் நகர் அருகே கால்வாய்கரை பகுதி உள்ளது. அங்கு 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்தனர். குடிசை மாற்று வாரியத்தால் மாற்று வீடுகளுக்கான கணக்கெடுப்பு பல ஆண்டுகளாக நடந்துள்ளது. இந்நிலையில் 2019 ல் எடுக்கப்பட்ட தரவுகளை கொண்டு 250 குடும்பங்களுக்கு பெரும்பாக்கத்தில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 80 குடும்பங்களுக்கு மேல் வீடுகள் ஒதுக்கப்படாத நிலையில் அவர்கள் வசித்து வந்த குடிசைகளும் இடிக்கப்பட்டுள்ளன.
இதனால், அங்கு வாழ்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நான்கு நாட்களாக சாலையோரங்களில் வசித்து வந்தவர்களுக்கு நேற்று மாலை சமூக நலக் கூடம் திறந்து விடப்பட்டுள்ளது. அடிப்படை வசதி எதும் இன்றி சமூக நலக் குடியிருப்பில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.
இதனால், குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாமாலும், பெரியவர்கள் வேலைக்கு செல்ல முடியாமலும், குறிப்பாக பெண்கள் உபாதைகள் கழிக்க முடியாமல் அவதிப்பட்டு வருவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். குடிசை மாற்று வாரியத்தில் இருந்து விரைவில் வீடுகள் ஒதுக்கி தரவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




