அடுக்குமாடி குடியிருப்பிற்கு பெண் ஒருவர் காரில் வந்த போது நுழைவு வாயிலை திறக்க தாமதமானதால் காவலாளியை தகாத வார்த்தைகளில் திட்டி, தாக்கிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் நொய்டா மாவட்டம் ஜேபி விஸ் நகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பு பகுதிக்கு இன்று இளம்பெண் ஒருவர் தனது காரில் வந்துள்ளார். அப்போது அந்த குடியிருப்பு பகுதிக்கு செல்லும் நுழைவாயில் கதவை திறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அப்பெண் காரை விட்டு இறங்கி பணியில் இருந்த காவலாளியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் அந்த காவலாளியை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, அவரை தாக்கியுள்ளார்.
பின்னர், ‘பெண்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்’ என கூறிய அப்பெண் பீகாரி சமூகம் குறித்தும் அவதூறு கருத்து தெரிவித்துள்ளார். காவலாளியை பெண் தாக்குவதும், அவதூறாக பேசும் வீடியோவும் சமூகவலைதளத்தில் பரவி வைரலானது.
இதுகுறித்து அந்த கட்டிடத்தின் காவல் மேற்பார்வையாளர் கூறுகையில், பணியில் இருந்த காவாலளி கதவை திறக்க சற்று தாமதமானது. உடனே அந்த பெண் காவாளியை தகாத வார்த்தைகளால் திட்டி கொண்டிருந்தார். நான் அந்த பகுதிக்கு வரும் போது அந்த பெண் திட்டி கொண்டிருப்பதை வீடியோ பதிவு செய்து எனது மேலதிகாரியிடம் காண்பித்தேன். பின்பு அந்த பெண் மீது போலீசில் புகாரளிக்கப்பட்டது என்று கூறினார்.
இந்த சம்பவம் குறித்து பணியில் இருந்த காவலாளி போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரை தொடர்ந்து பணியில் இருந்த காவலாளியை தகாத வார்த்தைகளால் திட்டி, அவரை தாக்கிய பெண்ணை போலீசார் கைது செய்தனர். அந்த பெண்ணின் மீது ஐபிசி 153ஏ, 323, 504, 502(2) மற்றும் 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







