பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ஏரியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் கோஹாட் மாவட்டத்தில் உள்ள தாண்டா அணை ஏரிக்கு மதரஸாவில் பயிலும் 7 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் 50க்கும் மேற்பட்டோர் சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது, மாணவர்கள் படகில் பயணித்தபோது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறிய படகு திடீரென ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51ஆக உயர்ந்துள்ளது. மேலும், 5 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விபத்து நேரிட்ட பகுதியில் உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குவிந்துள்ளனர்.
20 முதல் 25 பேர் மட்டுமே ஏறக்கூடிய படகில் அதிக அளவிலான மாணவர்கள் ஏறியதே விபத்து ஏற்படக் காரணம் என போலீஸார் தெரிவித்துள்ளனர். ராணுவப் பொறியாளர்கள் மற்றும் ராணுவ வீரர்கள் இணைந்து, கடந்த 72 மணி நேரமாக இரவு பகலாக மாணவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
-ம.பவித்ரா








