இந்தியத் திரையுலகின் புகழ்பெற்ற பின்னணிப் பாடகி வாணிஜெயராம் மறைவையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரபல திரைப்பட பாடகியான வாணிஜெயராம் இன்று காலமானார். இவருக்கு வயது 78. இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 19 மொழிகளில் பாடியுள்ளார். இவர் 3 முறை தேசிய விருதுகளை பெற்றுள்ளார். குடியரசு தினத்தன்று இவருக்கு பத்மபூஷன் விருதினை மத்திய அரசு அறிவித்தது.
பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் மறைவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இந்தியத் திரையுலகின் புகழ்பெற்ற இசைக்குயிலாக விளங்கிய பின்னணிப் பாடகி, கலைவாணி என்ற திருமதி வாணிஜெயராம் மறைவுற்ற செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன்.
தமிழ்நாட்டின் வேலூரில் பிறந்து உலகம் முழுக்க தமது இன்னிசையின் இனிமையால் புகழ் பெற்றவர். தமிழ் உட்பட 19 மொழிகளில், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட அழியாப் புகழ் பெற்ற பாடல்களைப் பாடி, ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பெற்றவர்.
அண்மையில் அவருக்கு ‘பத்மபூஷண்’ விருது அறிவிக்கப்பட்ட போது எனது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தேன். அறிவிக்கப்பட்ட விருதைப் பெறும் முன்னரே அவர் இவ்வுலகை விட்டுப் பிரிந்து செல்ல நேர்ந்தது பெரும் துயரை அளிக்கும் செய்தியாகும்.
பழம்பெரும் பின்னணிப் பாடகியான வாணிஜெயராம் மறைவு, இசையுலகைப் பொறுத்தவரை ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். வாணிஜெயராமை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.








