முதலமைச்சர் ஜெயலலிதாவை சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்துச் செல்லலாம் என அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் தெரிவித்ததாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக புகார் எழுந்ததை அடுத்து, கடந்த அதிமுக ஆட்சியில் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் செயல்பட்டு வரும் விசாரணை ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று ஆஜரானபோது, அவரிடம் 2 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது, அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த போது, முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, எம்.ஜி.ஆரைப் போல ஜெயலலிதாவையும் வெளிநாடு அழைத்துச் செல்லலாம் என அப்போதய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அமைச்சர் வேலுமணி ஆகியோரிடம் தெரிவித்ததாகக் வாக்குமூலம் அளித்துள்ளார்.
வெளிநாடு அழைத்துச் செல்வது குறித்து அப்போலோ மருத்துவர்களிடம் கலந்து பேசிய பிறகு முடிவெடுக்கலாம் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அப்போலோ தலைவர் பிரதாப் ரெட்டியின் மருமகன் விஜயகுமார் ரெட்டியை சந்தித்து இதே கருத்தை வலியுறுத்தியபோது, ஜெயலலிதாவின் உடல்நிலை நல்ல முன்னேற்றம் அடைந்திருப்பதாகவும், ஒரு வாரத்தில் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என்றும் அவர் தெரிவித்ததாக ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
ஜெயலலிதாவை வெளிநாடு அழைத்து செல்வது குறித்து அமைச்சரவையை கூட்ட சொன்னதாகவும், நான்கு நாட்கள் பரபரப்பாக பேசி பின்னர் அமைதியாக இருந்துவிட்டதாகவும் ஆணையத்தில் ஆஜரான அப்போதைய தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் வாக்குமூலம் அளித்திருப்பதை சுட்டிக்காட்டி ஆணையம் கேள்வி எழுப்பியது. அதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், இது தொடர்பாக ராம் மோகன் ராவ் தன்னிடம் எதுவும் பேசவில்லை என்றும் ஓ. பன்னீர் செல்வம் பதிலளித்துள்ளார்.