உடல் உறுப்பு தானம் வழங்கிய பெண்ணின் உடலுக்கு அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் நீண்ட வரிசையில் நின்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 27 ஆம் தேதி வேலூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் சத்யா (36) என்ற பெண் படுகாயம் அடைந்தார். இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர் முதற்கட்ட சிகிச்சைகள் வழங்கப்பட்டு உயர் சிகிச்சைக்காக அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு கடந்த 28-ஆம் தேதி மாற்றப்பட்டார்
அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள் தொடர்ந்து சத்யாவிற்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில் 29-ஆம் தேதி அவர் மூளைச்சாவு அடைந்ததை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். சத்யாவின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டு அவர்களின் ஒப்புதலுடன் சத்யாவின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது
அதன்படி சிறுநீரகம், கல்லீரல் , கண்கள் ஆகிய உறுப்புகள் தானமாக பெறப்பட்ட நிலையில் அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளி ஒருவருக்கு கல்லீரலும் , மற்ற உறுப்புகள் நோயாளிகளின் முன்னுரிமை அடிப்படையில் நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டது. உறுப்பு தானம் செய்த சத்யாவின் உடலுக்கு மருத்துவமனை ஊழியர்கள் நீண்ட வரிசையில் நின்று மௌன அஞ்சலி செலுத்தினர்.





