இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் நிர்வாக உறுப்பினர்களாக திமுக எம்.பி. தயாநிதி மாறன், அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் சென்னை செம்மஞ்சேரி கிழக்குக் கடற்கரைச் சாலை அருகே அமைந்துள்ளது. இது கடல்சார் போக்குவரத்துத் துறை தொடர்பான கல்வித்திட்டங்களை வழங்கும் பல்கலைக்கழகமாகும். இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் சட்டத்தின்படி 2008ம் ஆண்டு நவம்பர் 14ம் நாள் நிறுவப்பட்டது. சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த பல்கலைக்கழகத்திற்கு, கொச்சி, கொல்கத்தா, மும்பை, நவி மும்பை, விசாகப்பட்டினம் ஆகிய இடங்களிலும் வளாகங்கள் உள்ளன.
இந்நிலையில், தற்போது தேசிய கடல்சார் பல்கலைக்கழகத்தின் நிர்வாக உறுப்பினர்களாக மத்திய சென்னை மக்களவை தொகுதி எம்.பி. தயாநிதிமாறன், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி மக்களவை தொகுதி எம்.பி.யுமான ஓ.பி.ரவீந்திரநாத் குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளானர். இதே போல், மேற்கு வங்க மாநிலத்தின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி. சுகத்தா ராயையும் நியமித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.








