திருச்சி கருமண்டபம் அருகே உள்ள ஜெயலட்சுமி நகரில் 12 மணி நேரத்தில் பூர்த்தி செய்யப்பட்ட பாதாள சாக்கடை பணிகள் – டஸ்க் to டான் முறையில் விடிவதற்குள் பணியை நிறைவு செய்யும் புதிய முயற்சிக்கு மக்களிடையே வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பாதாள சாக்கடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருவெறும்பூர், கைலாஷ் நகர், கருமண்டபம் எடமலைப்பட்டி புதூர், உறையூர் போன்ற பகுதிகளில் பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் எல் & டி நிறுவனம் டஸ்க் to டான் என்கிற புதிய முறையில் இரவு 8 மணி அளவில் பாதாள சாக்கடை அமைக்கும் பணியை துவங்கி காலை 8 மணிக்குள் நிறைவு செய்யும் வகையில் ஒரு புதிய நடைமுறையைக் கையாண்டு வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சின்ன சின்ன தெருக்களில் நடைபெறும் பாதாள சாக்கடை பணிகளில் 2 மீட்டர் அளவிற்கு பள்ளம் உருவாக்கி – உரைகளை இறக்கி – வீடுகளில் இருந்து கனக்சன் கொடுத்து – பின்னர் பக்கவாட்டு பகுதிகளில் மணல்களை நிரப்பி 12 மணி நேரத்தில் இந்த வேலையை பூர்த்தி செய்கின்றனர்.
இந்த பணிகள் நடைபெறுவது தொடர்பான காணொளியை திருச்சி மாநகராட்சி நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தற்போது திருச்சி வாழ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை தந்துள்ளது. மேலும் இந்த காணொளி சமூக வலைதளங்களில் தொடர்ந்து வைரல் ஆகி வருகிறது.
இது தொடர்பாக எல் & டி குழுமத்தின் திட்ட பொறியாளர் நியூஸ்7 தமிழுக்கு கூறிய தகவல்கள் :
சின்ன சின்ன தெருக்களில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் என்பது கண்டிப்பாக சவாலாக உள்ளது. டஸ்க் to டான் என்கிற தலைப்பில் மிகவும் குறுகலான தெருக்களில் கூட பாதாள சாக்கடை பணிகளை 12 மணி நேரத்தில் முடிக்க முடியும்.
பல இடங்களில் பாதாள சாக்கடை பணிகள் துவங்கும் போது முடிப்பதற்கு தாமதம் ஏற்படுகிறது. இதனை ஈடு செய்ய வேண்டும் என்கிற நோக்கில் இந்த புதிய டெக்னாலஜியை நாங்கள் கையாண்டு வருகிறோம்.
சென்னை மும்பை – ஹைதராபாத் போன்ற பெருநகரங்களில் ஏற்கனவே இந்த முறையை பயன்படுத்தி L & T நிர்வாகம் பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் திருச்சியைப் பொருத்தவரை தற்போது முதல் கட்டமாக ஐந்து இடங்களில் இந்த டெக்னாலஜியின் வாயிலாக பாதாள சாக்கடைகளை அமைக்க துவங்கியுள்ளோம்.
12 மணி நேரத்தில் இரண்டு மீட்டர் அளவிற்கு பள்ளம் பறித்து உறைகளை இறக்கி வீட்டிலிருந்து கனெக்சன் கொடுப்பது என்பது அத்தனை எளிதான விஷயம் அல்ல; அதற்கு தேவையான முன்னேற்பாடுகளை நாங்கள் மிகவும் தீவிரமாக தயார் நிலையில் வைத்திருப்போம்.
ஒரு சில இடங்களில் பொதுமக்களின் ஒத்துழைப்பு எங்களுக்கு மிகவும் பலமாக அமையும் ஒரு சில இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் பட்சத்தில் அப்பகுதியில் உள்ள போக்குவரத்து காவலர்களின் உதவியோடு – பொதுமக்களிடம் இது குறித்து விரிவாக பேசி அவர்களின் ஒத்துழைப்பை பெருவது எங்களுக்கு மிகவும் சவாலாக உள்ளது.
திருச்சி மாநகர் பகுதிகளில் மட்டும் இதே மெத்தடை பயன்படுத்தி பாதாள சாக்கடை அமைப்பதற்காக மொத்தம் 45 இடங்களை தேர்வு செய்துள்ளோம் என்று எல் & டி குழுமத்தின் திட்ட பொறியாளர் தெரிவித்தார்.
எது எப்படியோ, மக்களின் துயரங்களுக்கு தீர்வு காணும் வகையில் திருச்சி மாநகராட்சி, பணிகளை துரித கதியில் முடுக்கிவிட்டிருப்பது மாநகர மக்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
- நெப்போலியன், செய்தியாளர்