திமுக ஆட்சியில் இருண்ட தமிழகம் தான் உருவாகி இருக்கிறது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டினார்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொடியேற்றி வைத்த பின்பு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: இன்று தமிழ்நாட்டில் மக்கள் விரோத ஆட்சி,மக்கள் விரும்பாத ஆட்சி, தடுமாறுகின்ற ஆட்சி நடைபெறுகிறது. அரசாங்க மேடையில் முதல்வர் ஸ்டாலின் திராவிட மாடல், திமுக மாடல் என்று வரம்பு மீறி பேசியிருக்க வேண்டாம் என்று நான் நினைக்கிறேன்.
தேர்தல் அறிக்கையில் கூட ஸ்டாலின் ஒன்றிய அரசு திராவிட மாடல் பற்றி சொல்லவில்லை.தேர்தல் முடிந்த பிறகு திராவிட மாடல் திராவிட மாடல் என்று சொல்கிறார். திராவிட மாடல் என்றால் என்ன? தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றுவதே திராவிட மாடல் என்று சொல்கிறாரா? விடியல் அரசு, தமிழ்நாடு விடியப் போகிறது என்றும் சொன்னார்கள் ஆனால் இன்று இருண்ட தமிழகம் தான், திமுக எப்போது வந்தாலும் தமிழகம் இருளும். இருண்ட தமிழகம் தான் உருவாகி இருக்கிறது. இந்த ஆட்சி தடுமாறுகிறது.மக்கள் நிச்சயம் இந்த ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவார்கள் என்று டிடிவி தினகர் தெரிவித்தார்.
-மணிகண்டன்








