லால் சலாம் படத்தில் நடிகர் ரஜினி மும்பை தாதாவாக நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த 2012-ஆம் ஆண்டு தனது கணவராக இருந்த நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘3’ படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். இந்த படமும், படத்தில் இடம்பெற்ற கொலவெறி பாடலும் இந்திய அளவில் பிரபலமானதோடு, மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இதையடுத்து 2015- ஆம் ஆண்டு கௌதம் கார்த்திக் நடிப்பில் ”வை ராஜா வை” என்ற படத்தை இயக்கினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் மூன்றாவது திரைப்படமான லால் சலாம் படத்தின் அறிவிப்பு வெளியானது. கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து, எடுக்கப்பட்டு வரும் இப்படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.
இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் எங்கிற கெஸ்ட் ரோலில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஹீரோயினாக யார் நடிக்கிறார் என்பது பற்றிய தகவல் இதுவரை வெளியாகாத நிலையில், விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
இப்படம் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருவதால், இப்படத்தில் சில கிரிக்கெட் வீரர்களும் நடிக்கிறார்கள் என கூறப்பட்டது. இந்நிலையில் இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார் என்ற சிறப்பு தகவல் அண்மையில் வெளியானது.
மொய்தீன் பாய் என்கிற கதாபாத்திரத்தில் சுமார் 20 நிமிடங்கள் இப்படத்தில் ரஜினியின் காட்சிகள் இடம்பெறும் என்று தகவல்கள் ஏற்கனவே வெளியாகி இருந்தது. இதனை தொடர்ந்து, புதிய அப்டேட்டாக ரஜினிகாந்த், மொய்தீன் பாய் கதாபாத்திரத்தில் மும்பை தாதாவாக நடிக்கிறார் என்றும் தற்போது மும்பையில் நடிக்கவுள்ள காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன என்றும் கூறப்படுகிறது.
ரஜினிகாந்த் நடித்த தமிழ்த் திரைப்படமான “பாட்ஷா” வெளியாகி 28 ஆண்டுகளுக்குப் பிறகும் இன்னும் ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. பாட்ஷா படத்திலும் ரஜினி மும்பை தாதாவாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.