நாடு முழுவதும் சிலிண்டர் விலை உயர்வு!

நாடு முழுவதும் வீட்டு உபயோக மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது.

இந்தியாவில் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் அந்நியச் செலாவணி மதிப்பைக் கணக்கில்கொண்டு, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் எரிபொருள் விலையை மாற்றியமைத்து வருகின்றன. அந்த வகையில் மார்ச் மாத முதல் வாரத்தின் இறுதி நாளான இன்று வீட்டு உபயோக பயன்பாட்டுக்கான 14.2 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மற்றும் வணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.

வணிக சிலிண்டர் விலை ரூ.115 உயர்வு:

அதன்படி, தமிழகத்தைப் பொருத்தவரை சென்னையில் வணிக சிலிண்டரின் விலை ரூ.115 உயர்ந்து, புதிய விலையாக ரூ.2,043.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஜூன் மாதத்துக்குப் பின், வணிக சிலிண்டர் விலை தற்போது மீண்டும் புதிய உச்சம் அடைந்துள்ளது.

வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.60 உயர்வு:

கடந்த ஏப்ரல் முதல் மக்கள் பயன்படுத்தும் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டரின் விலை எந்த மாற்றமுமின்றி விற்பனையாகி வந்த நிலையில், தற்போது ரூ.60 உயர்த்து, புதிய விலையாக ரூ.853 -இல் இருந்து ரூ.928.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த புதிய விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

முக்கிய மாநகரங்களின் சிலிண்டர் விலை விவரம் :

டெல்லியில் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.853 இல் இருந்து ரூ.913 ஆக அதிகரித்துள்ளது. மும்பையில் ரூ.852.50 இல் இருந்து ரூ.912.50 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் போதுமான எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு விநியோகம் இருப்பதாக மத்திய அரசு உறுதியளித்த போதிலும் இந்த விலை உயர்வால் ஹோட்டல்கள், சிறு வணிக நிறுவனங்கள் போன்ற வணிகங்களை பெரிதும் பாதிக்கும் என அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.