சிலிண்டர் விலை உயர்வு: தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம்!

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்விற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை இன்று உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல்…

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்விற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை இன்று உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 50ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.1,068-ஆக இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.1,118.50-ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், சிலிண்டர் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளில் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாடு எரிவாயு சிலிண்டர்களின் விலை மாற்றம் செய்யப்படுகிறது. ஆனால் திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா மாநில சட்டப்பேரவை தேர்தலையொட்டி கடந்த 3 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது.

தற்போது அந்த மாநிலங்களில் தேர்தல் முடிந்தவுடன் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு மூலம் அடுப்பை எரிக்கும் பெண்களுக்கு இந்த விலைவாசி உயர்வு வயிற்றெரிச்சலை உண்டாக்கியிருக்கிறது. சிலிண்டர் விலை ஏற்கனவே பலமடங்கு உயர்ந்திருக்கும் நிலையில், மீண்டும் மீண்டும் சிலிண்டர் விலையை உயர்த்தி மக்களின் தலை மீது சுமையை ஏற்றுவது நியாயமா?.

இதையும் படிக்க: சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு!

ஏற்கனவே, பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களின் விலை உயர்வால் அத்திவாசியப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்து தமிழக மக்கள் பெருந்துயருக்கு ஆளாகி, அன்றாட செலவினங்களையே எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகின்றனர். தற்போது எரிவாயு சிலண்டரின் விலையும் உயர்த்தப்பட்டிருப்பது அவர்கள் தலையில் விழுந்த பேரிடியாக அமைந்திருக்கிறது.

இந்த விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை திமுக இதுவரை நிறைவேற்றாமல் உள்ளது. இவ்வாறு மத்திய மாநில அரசுகள் நாட்டு மக்களை தொடர்ந்து வஞ்சித்து வருகின்றன. ஏழை, நடுத்தர வர்க்கத்து மக்களைப் பற்றி துளியளவும் சிந்திக்காமல் செயல்படும் மத்திய மாநில அரசுகளுக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறன் எனத் தெரிவித்துள்ளார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.