பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோனையும், பிரதமர் மோடியையும் ஒப்பிட்டு பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி பதிவிட்டுள்ள டிவிட் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
நேற்று கத்தாரில் நடைபெற்ற பிஃபா உலக கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணிகள் மோதின. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக கால்பந்து உலக கோப்பையை அர்ஜென்டினா அணி தட்டிச் சென்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இறுதிவரை எவ்வளவோ போராடியும் கோப்பையை தவறவிட்டது பிரான்ஸ் அணியினரை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியது. இதனால் மைதானத்தில் கண்ணீர்விட்டு அழுது சோகத்தில் மூழ்கியிருந்த பிரான்ஸ் வீரர்களை மைதானத்திற்குள் சென்று அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரேன் ஆறுதல் கூறி தேற்றினார்.
இந்த செயல் கால்பந்து ரசிகர்களை நெகிழச் செய்தது. இந்த செயலையும், சந்திராயன்-2 திட்டம் கடைசி நேரத்தில் எதிர்பாராதவிதமாக தோல்வியை தழுவியபோது கண்ணீர்விட்டு அழுத இஸ்ரோ தலைவர் சிவனை தோளோடு சாய்த்துக்கொண்டு பிரதமர் மோடி ஆறுதல் கூறியதையும் ஒப்பிட்டு, பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளராகவும் உள்ள சி.டி.ரவி வெளியிட்டுள்ள அந்த பதிவில், “மெஸ்ஸி உலக கோப்பையை வென்றுள்ளார். மேக்ரோன் இதயங்களை வென்றுள்ளார். சந்திராயன்-2 திட்டம் தோல்வி அடைந்தபோது, இஸ்ரோ தலைவர் சிவனுக்கு பிரதமர் மோடி ஆறுதல் கூறியதும் எப்போதும் நமது மனதில் நிற்கும். சிறந்த தலைவர்கள் எப்போதும் தங்களது மக்களுடன் உறுதியாக துணை நிற்பார்கள்“ என்று குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது.