சென்னை பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கான முழு பொறுப்பும் தமிழக அரசிடமே உள்ளது என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.
மாநிலங்களவையில் உறுப்பினர் வைகோ சென்னை பரந்தூரில் விமான நிலையம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதா? பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக பொதுமக்கள் மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் தீர்மானம் கொண்டுவரப்பட்டதை மத்திய அரசு கவனத்தில் எடுத்துள்ளதா? மத்திய அரசு மக்களுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதா? எனவும் அவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு தொகை அதிகரிக்கவும் திட்டங்கள் உள்ளதா? என எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள மத்திய விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே சிங், மத்திய அரசு நாடு முழுவதும் பசுமை விமான நிலையங்களை அமைக்க முடிவு செய்தது. அதன்படி, பசுமை விமான நிலைய 2008 கொள்கையின் படி அதற்கான ஒப்புதலும் வழங்கி வருகிறது. விமான நிலையம் அமைக்கப்படுவதற்கு இரண்டு ஒப்புதல்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் ஒன்று “சைட் கிளியரன்ஸ்” மற்றொன்று “கொள்கை ஒப்புதல்” ஆகும்.
தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டு ஆணையம் 2022 ஆகஸ்ட் மாதம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க திட்ட அனுமதி “Site-Clearance” வழங்க கோரி மத்திய அரசிடம் விண்ணப்பம் வழங்கியதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும், 2008 பசுமை விமான நிலைய கொள்கையின்படி விமான நிலையம் அமைக்கக்கூடிய அனைத்து பணிகளும், குறிப்பாக நிலம் கையக்கப்படுத்தல், மறுவாழ்வு, இழப்பீடு நிதி ஒதுக்குதல் ஆகியவை மாநில அரசு வசமே உள்ளது என விளக்கம் அளித்துள்ளது.







