ஆர்சிபி அணியுடனான போட்டியில் தோல்வி அடைந்ததால் சிஎஸ்கேவின் பிளேஆஃப் கனவு தகர்ந்தது.
கால்குலேட்டர் சகிதமாக ஆர்சிபி உடனான நேற்றைய போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த சிஎஸ்கே ரசிகர்கள் முடிவில் அந்த கால்குலேட்டரை சுக்குநூறாக உடைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தோனி கேப்டனாக வந்துவிட்டார். ஓப்பனிங் நன்கு செட்டாகிவிட்டது. கடந்த சில போட்டிகளாகவே ஆர்சிபி அணிக்கு எதிராக வெறித்தனமாக ஆடி வெற்றியைப் பதிவு செய்ததால் சென்னை அணியின் வெற்றி முடிவு செய்யப்பட்டுவிட்டதாகவே கருதப்பட்டது. போட்டி நடைபெற்ற புனே எம்சிஏ ஸ்டேடியத்தை பொறுத்தவரை முதலில் பேட்டிங் செய்த அணி 170ஐ தாண்டிவிட்டால் சேஸ் செய்வது மிகவும் கடினம்.
டாஸை வென்ற கேப்டன் தோனி பவுலிங்கை தேர்வு செய்தார். இந்த சீசனில் ஆர்சிபி அணிக்கு பவர் பிளேயில் பெரிய அளவில் ரன்கள் வரவில்லை. நேற்றைய போட்டி தலைகீழாக இருந்தது. பவர் பிளேயில் ஆர்சிபி அணியில் டூப்ளசிஸ், கோலி சிறப்பாக விளையாடினர். வேகப்பந்து வீச்சாளர்கள் கைகொடுக்காததால் தோனி ஸ்பின்னர்களை இறக்கினார். அதற்குப் பலனும் கிடைத்தது. மொயின்அலி, தீக்சனா, ஜடேஜா ஆகிய 3 ஸ்பின்னர்கள் கட்டுக்கோப்புடன் பந்துகளை வீசினர்.
அதேநேரத்தில் ஆர்சிபி அணிக்கு மகிபால், படிதர் மிடில் ஆர்டரில் சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்திருந்தனர். தினேஷ் கார்த்திக் ஃபினிஸிங்கில் நன்கு ஆடி ரன்கள் சேர்த்தார். வழக்கம்போல சிஎஸ்கேவின் டெத் பவுலிங் மோசமாக இருந்தது. இதனால், ஆர்சிபி 20 ஓவர்கள் முடிவில் 173 ரன்களை சேர்த்திருந்தது. 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு ருத்துராஜ், கான்வே நல்ல ஓப்பனிங் கொடுத்தனர். பவர் பிளேயில் சிறப்பாக ஆடினாலும் மிடில் ஓவர்களில் ருத்துராஜ், உத்தப்பா, ராயுடு, ஜடேஜா ஆகிய வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆகினர்.
கான்வே மட்டும் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். ஆர்சிபியின் ஸ்பின்னர்களும் சிறப்பாக செயல்பட்டனர். சிறப்பாக ஆடிய கான்வே, ஹசரங்கா பந்து வீச்சில் அவுட்டாகினார். மொய்ன்அலி சிஎஸ்கேவுக்காக சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் ஆடினாலும், அவரும் ஹர்சல் பட்டேல் பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறினார். கடைசி 2 ஓவர்களில் சிஎஸ்கேவுக்கு 39 ரன் தேவைப்பட்டது. களத்தில் தோனி இருந்தார். ஆர்சிபி அணிக்கு ஹேசில்வுட் மற்றும் ஹர்சல் பட்டேல் டெத் ஓவர்களில் சிறப்பாகப் பந்து வீசினர். இதன்காரணமாக தோனியும் ஹேசில்வுட் பந்தில் அவுட் ஆனார். இதன் மூலம் ஆர்சிபி அணி 13 ரன்னில் வெற்றி பெற்று தங்களது பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது.
10 போட்டிகளில் விளையாடி 3இல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளதால் சிஎஸ்கேவின் பிளேஆஃப் கனவு தகர்ந்துவிட்டது. மீதமுள்ள 4 போட்டிகளிலும் சிஎஸ்கே வென்றாலும் பிளேஆஃப் சுற்றுக்குச் செல்வது கேள்விக்குறிதான்.