ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் இன்று மோதுகின்றன.
ஐபிஎல் தொடரில், லீக் போட்டிகள் முடிந்து ‘பிளே-ஆப்’ சுற்றுகள் நடந்தன. இறுதிப் போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில், முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. வெளியேற்றுதல் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை வென்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இரண்டாவது தகுதி சுற்றில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் கொல்கத்தா அணியும் மோதின. இதில் கொல்கத்தா வெற்றி பெற்றதை அடுத்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் கொல்கத்தா அணி இன்று மோதுகிறது.
தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 9-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னை அணியில் ருதுராஜ் கெய்க்வாட், பாப் டு பிளிஸ்சிஸ் பேட்டிங்கில் சிறப்பான தொடக்கத்தை கொடுக்கின்றனர். கடந்த போட்டியில் ராபின் உத்தப்பா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடைசிக்கட்டத்தில் தோனியும் அதிரடி காட்டினார். பந்துவீச்சில் தீபக் சாஹர், ஹசில்வுட் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.
கொல்கத்தா அணி, பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் மிரட்டலாக இருக்கிறது. அந்த அணியின் சுப்மன் கில், வெங்கடேஷ் ஐயர், திரிபாதி, நிதிஷ் ராணா ஆகியோர் சிறப்பாக ஆடுகின்றனர். அந்த அணியின் பலமே சுழல் பந்துவீச்சுதான். சுனில் நரேன், வருண் சக்கரவர்த்தி, பெர்குசன், ஷகிப் அல் ஹசன் கடும் நெருக்கடி கொடுக்கின்றனர்.
கொல்கத்தாவின் சுழலை சமாளிப்பது சென்னை அணிக்கு கடினமாக இருக்கும் என்பதால் இன்று நடக்கும் இறுதிப் போட்டி சவாலாகவே இருக்கும். இந்த தொடரில், சென்னை அணி, சேஸிங் செய்து தோல்வியை தழுவியதில்லை. அதனால் டாஸ் வென்றால் சென்னை அணி பந்துவீச்சையே தேர்வு செய்யும் என்று தெரிகிறது. தோனியின் கேப்டன்ஷிப் சிறப்பாக இருப்பதால் அவர் தலைமையில், சென்னை அணி 4-வது முறையாக பட்டத்தை வெல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஏற்கனவே 2 முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ள கொல்கத்தா அணி 3-வது முறை யாக கோப்பையை கைப்பற்ற போராடும் என்பதால் இன்று நடக்கும் இறுதிப் போட்டி பரபரப்பாகவே இருக்கும். போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு துபாயில் நடக்கிறது.