கேரளாவை சேர்ந்த கணவன், மனைவி உக்ரைன் மற்றும் ஏமன் நாடுகளில் இக்கட்டான சுழலில் இருவேறு இடங்களில் சிக்கியுள்ளனர்.
ரஷ்யா உக்ரைன் இடையே நடைபெற்றுவரும் போரானது உலக நாடுகளிடம் கவனம் ஈர்த்துள்ளது. ரஷ்யாவின் அதிரடி தாக்குதலும் அதற்கான உக்ரைனின் எதிர்தாக்குதலும்தான் இப்போது உலக அளவில் பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக இருக்கிறது. உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்டுவரும் நடவடிக்கை போன்றே ஐக்கிய அரபு அமீரகமும் ஏமன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இந்தியாவை சேர்ந்த பலர் பிரச்னைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்படி, கேரளாவை சேர்ந்த தம்பதி ஒன்று உக்ரைன் மற்றும் ஏமனில் தனித்தனியாக இக்கட்டான சூழலில் சிக்கியுள்ளது தெரியவந்துள்ளது. கேரளாவின் அவூர் பகுதியை சேர்ந்தவர் அகில். இவர் தற்போது ஏமன் நாட்டில் கப்பலில் பணிபுரிந்து வருகிறார். ஹௌதி கிளர்ச்சியாளர்களால் கடந்த 31ம் தேதி அவர் பயணித்த கப்பலானது கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து 2 மாதங்களாக கப்பலானது கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. மேலும் இவரது மனைவி ஜிதினா, உக்ரைனில் இளங்கலை பட்டப் படிப்பில் இறுதி ஆண்டு படித்துவருகிறார்.
சில தினங்களாக உக்ரைன் – ரஷ்யா இடையே போர் நடந்துவருவதால் அந்த பகுதியில் ஜிதினா மாட்டிக்கொண்டுள்ளார். இவர்கள் இருவருமே இருவேறு நாடுகளில் சிக்கியுள்ளது அவர்கள் குடும்பத்தினரை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக அகிலின் தம்பி ராகுல் பேசியதாவது, “எனது அண்ணா ஏமனிலும், அவரது மனைவி உக்ரைனிலும் சிக்கியுள்ளனர். 2 மாதங்களாக கிளர்ச்சியாளர்களிடம் பணயக்கைதியாக சிக்கியுள்ள எனது அண்ணன் பாதுகாப்பாக இருந்தாலும், அவரை மீட்க எந்த அரசும் முன்வரவில்லை. அவர் பணிபுரியும் கப்பலில் மொத்தம் 6 இந்தியர்கள் உள்ளனர். ஆனால் இவர்களை மீட்க யாரும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏமாற்றமளிக்கிறது” என்று தெரிவித்தார்.
அகில் பயணித்த கப்பலானது மருந்து, மருத்துவம் சார்ந்த சாதனங்கள், பாதுகாப்பு கருவிகள் உள்ளிட்டவைகளுடன் பயணித்தது என்று ஐக்கிய அரபு அமீரகம் விளக்கம் அளித்துள்ளது. ஆனாலும் ராணுவ ஆயுதங்களைதான் அந்த கப்பலில் கொண்டுசெல்வதாகவும், இதனை கொண்டு தங்களுடன் போரிடவே இந்த பொருட்கள் எடுத்துவரப்பட்டதாகவும் ஹவுதி கிளர்ச்சியாளரக்ள் தெரிவிக்கிறது.