‘2047ல் நாட்டின் பொருளாதாரம் 40 ட்ரில்லியன் டாலராக உயரும்’ – முகேஷ் அம்பானி

2047ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் பொருளாதாரம் 40 ட்ரில்லியன் டாலராக உயரும் என முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.  குஜராத் மாநிலத்தின் காந்தி நகரில் உள்ள பண்டிட் தீன்தயாள் எனர்ஜி பல்கலைக்கழகத்தின் 10ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா…

2047ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் பொருளாதாரம் 40 ட்ரில்லியன் டாலராக உயரும் என முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். 

குஜராத் மாநிலத்தின் காந்தி நகரில் உள்ள பண்டிட் தீன்தயாள் எனர்ஜி பல்கலைக்கழகத்தின் 10ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி பங்கேற்றார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், ”3 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை கொண்டிருக்கும் இந்தியா, 2047ஆம் ஆண்டிற்குள் 13 மடங்கு அதிகரித்து, 40 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக வளர்ச்சியை அடையும். பொருளாரத்தில் உலகின் முதல் மூன்று இடங்களுக்குள் இந்தியா இடம்பெறும்.

இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும்போது, பொருளாதார வளர்ச்சியில் இந்திய நாடு பல்வேறு மாற்றங்களை காணும். பெரிய வளர்ச்சியை எட்டும். பயோ-எனர்ஜி புரட்சி, டிஜிட்டல் புரட்சி, கிளீன் எனர்ஜி புரட்சி ஆகிய மூன்றும் வருங்காலங்களில் இந்தியாவின் அசுர வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும். இந்த மூன்று புரட்சிகளும் சேர்ந்து நம்முடைய அழகான பூமியை காலநிலை நெருக்கடியிலிருந்து காப்பாற்ற உதவும்” என்றும் கூறியுள்ளார்.

ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் கௌதம் அதானி, 2050ஆம் ஆண்டிற்குள், இந்தியா 30 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயரும் என்று கடந்த வாரம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.