கம்பம் அருகே நள்ளிரவில் நாட்டு வெடிகுண்டுகள் வீசிய சம்பவத்தால் பொதுமக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அப்பகுதியில் போலீஸார் பாதுகாப்புப் பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள நாராயணதேவன்பட்டியில் உள்ள நேசன் பாடசாலை அருகே நேற்று நள்ளிரவு இரண்டு மணி அளவில் மர்ம நபர்கள் ஐந்து நாட்டு
வெடிகுண்டுகளை வீசி உள்ளனர். குண்டுகள் வீசப்பட்டதில் வீடுகளின் கண்ணாடிகள்
மற்றும் தெருக்களில் சேதம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும்
இல்லை என்கிற போதிலும், குண்டு வெடித்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல்
உள்ளனர். குண்டுகள் வெடித்த சத்தம் கேட்டு அலறியடுத்து பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே ஓடி வந்தனர். இது தொடர்பாக நள்ளிரவு 2 மணிக்கு
காவல் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்ட நிலையில், ஏ.எஸ்.பி.ஸ்ரேயாகுப்தா
தலைமையிலான காவல் துறையினர் காலை 7 மணிக்கு தான் அப்பகுதிக்கு வந்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
வெடித்த குண்டுகளின் மாதிரிகளை சேகரிக்கும் பணியில் காவல் துறையினர்
ஈடுபட்டுள்ளனர். நாட்டு வெடிகுண்டுகளை வீசி சென்றவர்கள் யார்? எதற்காக வீசிச்
சென்றனர்? என்று அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு
காவல் துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர். காவல் துறையினரின் முதல் கட்ட
விசாரணையில், அந்த தெருவில் குடியிருக்கும் மக்கள் அதிகாரம் அமைப்பைச்
சேர்ந்தவர்களுக்கும், கம்பம் அருகே உள்ள K.K. பட்டியைச் சேர்ந்த ஒரு
தரப்பிற்கும் கடந்த வாரம் மோதல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான முன் விரோதத்தில்
நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டுள்ளனவா? என்பது குறித்தும் காவல் துறையினர்
விசாரணை நடத்தி வருகின்றனர்.
நள்ளிரவில் நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
-ம.பவித்ரா