ஊரடங்கை அமல்படுத்துவதற்கான சூழல் தற்போது இல்லை என சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இரட்டை இலக்க எண்களில் மட்டுமே சில மாதங்களாக கொரோனா பதிவாகி வந்த நிலையில், தற்போது சற்று அதிகரித்து வருகிறது. இதனால் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டு, அபராதம் வசூல் செய்வதும் மீண்டும் அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் சென்னை கிண்டி கிங்ஸ் கொரோனா மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, 27 மாவட்டங்களில் கொரோனா தொற்று இல்லை. 9 மாவட்டங்களில் ஆங்காங்கே பரவல் உள்ளது என்று தெரிவித்த ராதாகிருஷ்ணன், “1.48 கோடி பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை. உடனடியாக மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். தமிழ்நாடு கவலைப்பட வேண்டிய கட்டத்தில் இல்லை. அக்கறை காட்ட வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம்” என்று குறிப்பிட்டார்.
தர்மபுரி, ராணிப்பேட்டை, மதுரை, திருப்பத்தூர், நாமக்கல், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தும் விகிதம் குறைவாக உள்ளதாகவும், தமிழ்நாட்டில் 1000 பேரில் 3 பேருக்கு மட்டுமே தொற்று பதிவாகிறது என்றும், மார்ச் 2020 ஒப்பிட்டு பார்க்கும் போது பல்வேறு அனுபவங்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, தடுப்பூசி செலுத்திக்கொள்வது மட்டும்தான் தற்போது வல்லுநர்கள் கருத்தாக உள்ளது என்று கூறிய அவர், ஊரடங்கு அமல்படுத்துவதற்கும், கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவதற்கான சூழ்நிலை தற்போது இல்லை, மருத்துவமனைகளில் மின்வெட்டு பிரச்சனை இல்லை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மருத்துவமனைகளிலும் ஜெனரேட்டர்கள் தயார் நிலையில் உள்ளது என்றும் கூறினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.