கொரோனா நிவாரணத் தொகை, மளிகைப்பொருட்களை பெறாதவர்களுக்கான கால அவகாசத்தை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மே மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 தவணைகளாக 4 ஆயிரம் ரூபாயும், 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்குவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. இதுவரை 99 சதவீத குடும்ப அட்டைதாரர்கள் நிவாரண உதவி பெற்றுள்ளனர்.
இந்நிலையில், இதுவரை உதவித்தொகை பெறாத பயனாளிகள் நிவாரணத் தொகை, மளிகைப்பொருட்களை பெறாதவர்களுக்கான கால அவகாசத்தை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி வரும் 31ஆம் தேதிக்குள் ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம்.
கொரோனா பாதிப்பு மற்றும் இதர காரணங்களால் ஜூலை 31க்குள் பெற இயலாத 15.06.21 அன்றைய தேதியில் தகுதியுடன் இருந்த அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் மாவட்ட வழங்கல் அலுவலர் நிலையான அலுவலரிடம் நியாய விலைக் கடை மூலமாக தகவல் தெரிவித்து அனுமதி பெற்று அதன்பின், அவர்களுக்கு உரிய ரேஷன் கடைகளில் இருந்து வழங்கும் முறை பின்பற்றப்படும். மேலும், புதிய அரிசி குடும்ப அட்டை தாரர்கள் ஆகஸ்ட் முதல் வாரத்திலிருந்து கொரோனா நிவாரண தொகை மற்றும் மளிகை பொருட்களை பெற்றும் கொள்ளலாம் என்றும் அரசு அறிவித்துள்ளது.








