கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் இருக்கை வசதி ஏற்படுத்த சட்டத் திருத்த முன் வடிவு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் பேசிய தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் நபர்கள் வேலை நேரம் முழுவதும் நிற்க வைக்கப்படுகின்றனர். அதனால், அவர்கள் பல்வேறு உடல் நலக் கேடுகளாலும் பாதிக்கப்படுகின்றனர். கடைகள் மற்றும் நிறுவனங்களில் வேலை நேரம் முழுவதும் நிற்கும் பணியாளர்களின் நிலைமையை கருத்தில் கொண்டு இருக்கை வசதி வழங்குதல் அவசியமாகிறது எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், மாநில தொழிலாளர் ஆசோசனைக் குழுவின் கூட்டத்தில் வேலையாட்களுக்கு இருக்கை வசதி வழங்கும் பொருட்கூறானது முன்வைக்கப்பட்டு குழுவின் உறுப்பினர்களால் ஒத்தக் கருத்துடன் ஏற்கப்பட்டது. இதையடுத்து தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தினை திருத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.







