இங்கிலாந்தில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த முறை முதல்முறையாக கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 8 நாடுகளைச் சேர்ந்த மகளிர் கிரிக்கெட் அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ளன.
குரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, இந்தியா, பார்படாஸ், பாகிஸ்தான் ஆகிய அணிகளும், குரூப் பியில் இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை ஆகிய அணிகள் இடம்பெற்றன.
குரூப் ஏ பிரிவின் முதல் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில், இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதின. பர்மிங்ஹாமில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது இந்தியா.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது இந்தியா.
அதிகபட்சமாக கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் அரை சதம் பதிவு செய்தார். ஷஃபாலி வர்மா 48 ரன்களில் ஆட்டமிழந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மிருதி மந்தனா 24 ரன்களில் நடையைக் கட்டினார்.
இவ்வாறாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்தியா 8 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது.
155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலியா 19 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. இந்திய பந்துவீச்சாளர்கள் மிக்ச சிறப்பாக பந்துவீசி தொடக்க வரிசை வீராங்கனைகளை எளிதில் ஆட்டமிழக்க செய்தபோதிலும், ஆஷ்லீ கார்ட்னர், கிரேஸ் ஹாரிஸ் ஆகியோர் சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றியைத் தேடி தந்தனர்.
இந்திய அணி சார்பில் ரேனுகா சிங் அதிகபட்சமாக 4 ஓவர்கள் வீசி 4 விக்கெட்டுகளை சுருட்டினார். அடுத்தபடியாக தீப்தி சர்மா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ராதா யாதவ் 4 ஓவர்கள் வீசி 42 ரன்களை வாரி வழங்கினார்.
இந்திய அணி அதிர்ச்சி தோல்வியுடன் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியைத் தொடங்கியுள்ளது. அடுத்ததாக இந்திய மகளிர், பாகிஸ்தானை 31ம் தேதி எதிர்கொள்கிறது.








