சிறுமலையில் தொடர்ந்து பெய்யும் மழை! விடுதலை – 2 படப்பிடிப்பு பாதிப்பு!

விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்திற்கு மீதமுள்ள காட்சிகளுக்கான படப்பிடிப்பு துவங்கிய சிறுமலை பகுதியில் மழையின் காரணமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி முதல் முறையாக…

விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்திற்கு மீதமுள்ள காட்சிகளுக்கான படப்பிடிப்பு துவங்கிய சிறுமலை பகுதியில் மழையின் காரணமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி முதல் முறையாக கதையின் நாயகனாக நடித்துள்ள படம் விடுதலை. ஜெயமோகன் எழுதிய துணைவன் சிறுகதையை மையமாக கொண்டு வெற்றிமாறன் இயக்கியுள்ள இப்படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டு, அதன் முதல் பாகம் கடந்த மார்ச் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியானது.

இந்த படத்தில் நடிகர் சூரியுடன், பவானி ஶ்ரீ, விஜய் சேதுபதி, கௌதம் மேனன், சேத்தன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.  அசுரன் படத்தின் வெற்றிக்கு பிறகு கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் கழித்து வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை திரைப்படம் உருவாகி வெளிவந்தால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்தது. அந்த எதிர்பார்ப்பை மிக நேர்தியாகவே வெற்றிமாறன் பூர்த்தி செய்திருந்தார்.

படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமின்றி கலவையான விமர்சனங்களையும் பெற்று வசூல் ரீதியாக வெற்றி படமாகவே அமைந்தது. இந்த நிலையில், விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்திற்கு மீதமுள்ள காட்சிகளுக்கான படப்பிடிப்பு சிறுமலை பகுதியில் மீண்டும் துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்பாகத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை மஞ்சு வாரியர் நடித்து வருவதாக தகவல் வெளியானது. முன்னதாக, வெற்றிமாறன் இயக்கிய ‘அசுரன்’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சிறுமலையில் தொடர்ந்து பெய்யும் மழையால் படப்பிடிப்பை திட்டமிட்டபடி எடுக்க முடியாமல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.