தொடா்விடுமுறை காரணமாக சென்னையிலிருந்து விமானங்களில் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கு செல்லும் விமான பயணச்சீட்டு கட்டணம் இரு மடங்கு முதல் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகள் ளை சேர்ந்தவர்கள் சென்னையில் பணிபுரிந்து வருகின்றனர். இதேபோல் கேரளா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தர்வகளும் பணி நிமித்தமாக சென்னையில் வசித்து வருகின்றனர். தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட முக்கிய பண்டிகையின் போது அவர்கள் சொந்த ஊர் செல்வது வழக்கம்.
இந்நிலையில், மிலாடி நபி, காந்தி ஜெயந்தி, காலாண்டு தேர்வு உள்ளிட்ட தொடர் விடுமுறை காரணமாக ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். இதேபோல் 5 நாள் விடுமுறை என்பதால் பலர் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்கின்றனர். பள்ளி மாணவா்களுக்கு காலாண்டு விடுமுறை தொடங்கி விட்டதால் குடும்பத்துடன் சொந்த ஊா் மற்றும் சுற்றுலா செல்லும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இதனால் விமானங்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு வழக்கமாக ரூ.3,853 வசூலிக்கப்படும் நிலையில் செப். 28-ஆம் தேதி ரூ.11,173, செப். 29-ஆம் தேதி ரூ.9,975 வசூலிக்கப்படுகிறது. இதேபோல் பல்வேறு நகரங்களுக்கு விமான கட்டணம் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு உயர்த்தி விற்கப்படுகிறது.அதேபோல் வெளிநாட்டு விமான சேவைகளின் கட்டணமும் உயர்ந்துள்ளது. சென்னையிலிருந்து சுற்றுலாத் தலமான தாய்லாந்துக்கு வழக்கமாக 9 ஆயிரம் வசூலிக்கப்படும் நிலையில் செப்.27 முதல் 29-ஆம் தேதி வரை ரூ.22,000 முதல் ரூ.39ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது. இதேபோல் மலேசியா, சிங்கப்பூர் வளைகுடா நாடுகளுக்கு விமானம் கட்டணம் அதிகரித்துள்ளது.
இந்த கட்டண உயர்வுக்கு தட்கல் பதிவு முறையே காரணம் என பயணிகள் மற்றும் போக்குவரத்து நிறுவனங்கள் தெரிவிக்கின்றனர். தட்கல் முறையை பயன்படுத்த விடுமுறையின் போது விமானம், ரயில், தனியார் பேருந்துகள் கட்டண கொள்ளையில் ஈடுபட்டு வருவது உச்சகட்டத்திற்கு சென்றுள்ளதாகவும், இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.






