வேளாண் சட்டங்களை எதிர்த்து முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்தை வரவேற் கிறேன் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் இதுபற்றி அவர் கூறியதாவது:
தமிழகம் மட்டும் அல்ல, இந்தியாவே திரும்பி பார்க்கின்ற வகையில் சட்டமன்றத்தில் மத்திய வேளாண் சட்டங்களை எதிர்த்து முதலமைச்சர் தீர்மானம் கொண்டு வந்து உள்ளார். இந்தியாவில் உள்ள விவசாயிகள் அனைவரும் பாராட்டி வரவேற்கின்றனர். பல லட்சம் விவசாயிகள் போராடும்போது குறைந்தபட்சம் கோரிக்கை என்னவென்று மத்திய அரசோ பிரதமரோ, வேளாண் அமைச்சரோ விசாரிக்கவில்லை.
தமிழகத்தில் ஆட்சி பொறுப்பு ஏற்றதும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக முதலமைச்சர் தீர்மானம் கொண்டு வந்துள்ளார். ஒவ்வொரு மாநில அரசுகளும் மத்திய அரசின் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டு வரலாம் என்று சோனியாகாந்தி கூறினார். முதலமைச்சர் கொண்டு வந்து உள்ள சட்டத்தை வரவேற்கிறோம்.
இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.








